குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?

முன்னுரை:  பொதுவாக முஸ்லிம்களிடம்  "குர்-ஆன்" எப்படி வேதமாகும் என்று இதர மார்க்கத்தார்கள் கேட்டுவிட்டால் போதும், உடனே ஒரு பெரிய விஞ்ஞானி போல பேச ஆரம்பித்து விடுவார்கள். குர்-ஆனில் இந்த விஞ்ஞானம் உண்டு, அந்த கண்டுபிடிப்பு உண்டு, இந்த கண்டுபிடிப்பு சமீப காலத்தில் தான் கண்டுபிடித்தார்கள் என்று சொல்லிக்கொண்டே செல்வார்கள். ஒரு சராசரி முஸ்லிமே இந்த நிலையில் பேசினால், ஒரு முஸ்லிம் அறிஞர் எவ்வளவு பேசுவார்? இப்போது நம் இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களின் குர்-ஆன் விளக்கவுரையிலிருந்து ஒரு விஞ்ஞான அற்புதத்தை நாம் கண்டுகளிப்போம்.

இந்த கட்டுரையை நாம் கீழ்கண்ட உபதலைப்புகளில் படிப்போம்.

1) நீருக்குள் பிரசவம் – நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு

2) 7ம் நூற்றாண்டிலேலே முஹம்மதுவிற்கு வெளிப்பட்ட இன்றைய விஞ்ஞானம். பீஜே அவர்களின் விளக்கம்.

3) இந்த குர்-ஆன் வசனங்கள் நீருக்குள் பிரசவம் பற்றி பேசுகின்றதா?

4) பிரசவ வலியாள் துடிக்கும் பெண்ணை, பேரிச்ச மரத்தின் அடிபாகத்தை உலுக்கும் படி அறிவுரை கூறிய அல்லாஹ்

5) குர்-ஆனில் விஞ்ஞானம் என்ற மாயவலை

6) முடிவுரை: குர்-ஆனில் விஞ்ஞானம் என்பது நவீன இஸ்லாமிய வாதிகளின் கண்டுபிடிப்பு தான்.


 பீஜேவிற்கு கேள்வி: மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?

1) நீருக்குள் பிரசவம் – நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு

சமீப காலமாக நீருக்குள் பிரசவம் என்பது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. நீருக்குள் பிரசவம் நடைப்பெறும் போது பிரசவ வலி குறையும் என்பது ஒரு நன்மையாகும். ஆனால், தாய்க்கும், பிள்ளைக்கும் ஆபத்துக்கள் இதன் மூலம் அதிகமாக ஏற்படலாம், பிறந்தவுடன் நீருக்குள் மூச்சு திணறி குழந்தை மரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான தாய், நார்மல் பிரசவம் நடைப்பெறும் என்று மருத்துவர்களால் எதிர்ப்பார்க்கப்படும் பெண்களுக்கு இது ஏற்றதாக இருக்கும், ஆனால், பிரசவத்தின் போது எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு விட்டால், தாய் மற்றும் குழந்தையின் நிலை மிகவும் மோசமாக மாறிவிடும், உயிருக்கு ஆபத்தாக முடியும்.

இந்த கட்டுரையின் நோக்கம், நீருக்குள் பிரசவம் என்பது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி ஆய்வு செய்வதல்ல, எனவே, இந்த விஞ்ஞான விரவம் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி சில விவரங்களை படித்துக்கொள்ளலாம், மேலும் இணையத்தில் கிடைக்கும் விஞ்ஞான ஆய்வு மருத்துவ கட்டுரைகளையும் படித்துக்கொள்ளலாம்.

http://en.wikipedia.org/wiki/Water_birth

2) 7ம் நூற்றாண்டிலேலே முஹம்மதுவிற்கு வெளிப்பட்ட இன்றைய விஞ்ஞானம்

பீஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கவுரையில் கீழ்கண்டவாறு எழுதுகிறார் (எண் 436 – நீருக்குள் பிரசவம்):

436. நீருக்குள் பிரசவம்

19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு பிடித்துள்ளது

பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தைத் தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.

குர்-ஆன் ஒரு இறைவேதம் என்று இஸ்லாமியரல்லாதவர்கள் நம்பவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனேக யுக்திகளை கையாளுகிறார்கள், அதில் ஒன்று இன்றைய விஞ்ஞானம் அன்றைய குர்-ஆனில் காணப்படுகின்றது என்பது பற்றியதாகும்.  இந்த வரிசையில், பீஜே அவர்கள் தன் பங்கிற்கு என்ன செய்யமுடியுமோ அதனை செய்துக்கொண்டு இருக்கிறார்.

ஒருவர் பீஜே அவர்களின் குர்-ஆன் விளக்கவுரைகள் அனைத்தையும் அவரது குர்-ஆன் தமிழாக்கத்தில் படித்தால், தொலைக்காட்சியில் விஞ்ஞான உலக செய்திகளை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு உண்டாகும். டிஸ்கவரி சானல்(Discovery Channel), நாஷ்னல் ஜியாக்கிரபிக் (National Geographic channel) போன்ற விஞ்ஞான, சரித்திர, பூகோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

எப்படியாவது குர்-ஆனிலிருந்து ஏதாவது சில வசனங்களை எடுத்துக்கொண்டு, அவைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசி, "இதோ எங்கள் வேதம், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே, இன்றைய விஞ்ஞானம் பற்றி துள்ளியமாக சொல்கிறது" என்று நாகூசாமல் பொய்களை பீஜே அவர்கள் அள்ளிவிசுகிறார்.

பீஜே அவர்களின் ஒரு சில கட்டுரைகள், புத்தகங்கள், பேச்சுக்களை கேட்பவர்கள், "ஆஹா.. எவ்வளவு அருமையாக இவர் பேசுகிறார், விவரிக்கிறார்" என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், தொடர்ந்து அவரை கவனித்துக்கொண்டே இருந்தால், குறிப்பாக அவரது குர்-ஆன் விரிவுரைகளை முழுவதுமாக படித்தால்,

"அய்யய்யோ.. எவ்வளவு பொய்களை இவர் அள்ளி வீசுகிறார்... இதை கேள்வி கேட்க யாருமில்லியா?" என்று சொல்லத்தோன்றும்.

நான் சொல்வதை நம்பவில்லையானால், நீங்களே அவரது அனைத்து ஆக்கங்களையும், பேச்சுக்களையும், குர்-ஆன் விளக்கவுரைகளையும் படித்துப் பாருங்கள்.

ஆக, குர்-ஆன் வசனங்களுக்கு அவர் பூசிய விஞ்ஞான முலாமை இப்போது நாம் சோதிக்கப்போகிறோம். இப்போது இந்த விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட குர்-ஆன் வசனங்களை காண்போமா?

3) இந்த குர்-ஆன் வசனங்கள் நீருக்குள் பிரசவம் பற்றி பேசுகின்றதா?

பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய இரண்டு (விஞ்ஞான!) வசனங்களை அவரது மொழியாக்கத்திலிருந்து படிப்போம்.

குர்-ஆன் 19:23: பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.

குர்-ஆன் 19:24: 'கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.

வாசர்களாகிய நீங்கள், மேற்கண்ட வசனங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துக்கொள்ளுங்கள், நாம் அவைகளை ஆராயப்போகிறோம்.

இந்த வசனத்தில் வரும் பெண், இயேசுவின் தாயாகிய மரியாள் ஆவார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது, அவர் வலி தாங்க முடியாதவராக "நான் இதற்கு முன்பே செத்து போய் இருக்கலாமே" என்றுச் சொல்லி வேதனையடைகிறார்.  அப்போது அங்கே ஒரு ஊற்றை அல்லாஹ் உருவாக்கினார் என்றும், அதைப் பற்றி மரியாளுக்கு அறிவிக்கப்பட்டது என்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன.

விஞ்ஞான வசனம் குர்-ஆன் 19:24: மேற்கண்ட இரண்டு வசனங்களை படித்தால், "ஆம், பீஜே  சொல்வது சரி தான், பிரசவ வேதனையுள்ள ஒரு பெண்ணுக்காக ஒரு ஊற்றை அல்லாஹ் உருவாக்குகிறான் என்றால் (19:24), கிட்டத்தட்ட பீஜே சொன்னது போல் அல்லவா இது இருக்கிறது" என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும்.

ஆனால், இப்படிப்பட்ட விளக்கவுரை, அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது, அவைகளுக்கு பதில் தர பீஜே அவர்களால் முடியுமா? இவ்வசனங்கள் உண்மையாகவே நீருக்குள் பிரசவம் பற்றி தான்  பேசுகின்றதா?

இவைகளை இப்போது விளக்குவோம்.

4) பிரசவ வலியாள் துடிக்கும் பெண்ணை, பேரிச்ச மரத்தின் அடிபாகத்தை உளுக்கும் படி அறிவுரை கூறிய அல்லாஹ்

குர்-ஆன் 19ம் அதிகாரம், 23, 24 வசனங்கள் முழு விவரங்களையும் சொல்லவில்லை. பிரசவ வலியால் துடிக்கும் மரியாளுக்கு உண்மையாகவே அல்லாஹ் என்ன சொல்லவருகிறார் என்று அறிய இன்னும் 3 வசனங்களை நாம் சேர்த்து படிக்கவேண்டும். குர்-ஆன் 19:22 லிருந்து 26 வரையுள்ள வசனங்களை படிப்போம். விஞ்ஞானம் உள்ளது என்று பீஜே அவர்கள் குறிப்பிட்டது 23, 24 வசனங்களையாகும்.

பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.(குர்-ஆன் 19:22)  

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.(குர்-ஆன் 19:23)   

'கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். (குர்-ஆன் 19:24)

'பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்) (குர்-ஆன் 19:25)

நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக! (குர்-ஆன் 19:26)

மேற்கண்ட ஐந்து வசனங்களை படித்துவிட்டு, இப்போது சொல்லுங்கள், இந்த வசனங்கள் நீருக்குள் பிரசவம் என்ற நவீன விஞ்ஞானம் பற்றி பேசுகின்றதா?

இவ்வசனங்களின் சுருக்கம் இது தான்:

1) மரியாள் கருவுற்ற கருவுடன் தூரமான இடத்திற்குச் செல்கிறார்.

2) பிரசவ நேரம் வந்த போது, பிரசவ வலியால் துடிக்கிறார், வலியின் வேதனையை தாங்க முடியாமல், தான் இதற்கு முன்பே மரித்துப்போய் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சொல்கிறார்.

3) அல்லாஹ் ஒர் நீருற்றை ஏற்படுத்துகிறார், அதே போல, பேரிச்ச மரத்தை உலுக்குபடி கேட்டுக்கொள்கிறார்.

4) பிறகு, அல்லாஹ் மரியாளிடம் நீரை குடித்து, பேரிச்ச பழங்களை சாப்பிடு என்றுச் சொல்கிறார்.

இது தான் அவ்வசனங்கள் சொல்லும் விவரங்கள். குடிப்பதற்காக தண்ணிரும், சாப்பிடுவதற்காக பேரிச்ச பழங்களையும் இருக்கின்றன என்று அவருக்கு சொல்லப்படுகின்றது. ஆனால், பீஜே அவர்கள் முழு பூசணிக்காயை அப்படியே மறைத்துவிட்டு, அந்த நீருற்று என்பது மரியாளுக்காகத் தான் அதுவும், மரியாளுடைய பிரசவ வலியை நீக்குவதற்கு அல்லாஹ் உருவாக்கியது என்கிறார். மரியாள் அந்த நீருற்றில் இறங்கினால், அவரின் வேதனை குறையும் என்று தன் சொந்த விரிவுரையை இவர் கூறுகிறார். பீஜே அவர்கள் தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்றும், இவர் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்றும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.

இந்த குர்-ஆன் வசனங்களில் அனேக சிக்கல்கள், தவறுகள் உள்ளன. அவைகளை இப்போது காண்போம். பீஜே அவர்களோ, அல்லது இதர இஸ்லாமியர்களோ, தங்கள் விஞ்ஞான அறிவை பயன்படுத்தி இந்த சிக்கல்களை அவிழ்க்கட்டும்.

1) பிரசவ வேதனை அடைந்து, துக்கிக்கும் ஒரு பெண்ணிடம் போய், நீ பேரிச்ச மரத்தின் அடியை பிடித்து உலுக்கு அது உனக்கு பழங்களைத் தரும், நீ சாப்பிடலாம் என்று அறிவுள்ள மனிதன் எவனாவது கூறுவானா?

2) பசியால் துடிக்கும் ஒரு  பெண்ணிடம் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால், பிரசவ வேதனை என்பது மிகவும் கொடுமையானது என்றுச் சொல்வார்கள், பெண்கள் படும் பாடுகள் மிகவும் அதிகம், அதனை நம் குடும்பங்களில் நாம் கண்டுள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு பேரிச்ச மரத்தை உலுக்கு என்றுச் சொல்வது அறிவுடமையாக தெரிகின்றதா?

3) இப்படிப்பட்ட அறிவுரையை கூறுபவன் ஒரு இறைவனா? இது நடைமுறையில் சாத்தியமா?

4) ஒரு நீருற்றை அற்புதமாக ஏற்படுத்திக்கொடுத்த அல்லாஹ், ஏன் காற்றை அனுப்பி பேரிச்ச பழங்கள் கீழே உதிர வைத்திருக்கக்கூடாது? ஒரு நிறை மாத கர்ப்பிணி, அதிலும் பிரசவத்தின் வலியால் துடிக்கும் பெண்ணிடம் சாப்பாடு பற்றியா பேசுவது?  மரியாள் தனக்கு பசிக்கிறது, சாப்பாடு தாருங்கள் என்று கூறினாரா? இல்லையே! அல்லாஹ் எப்படி வலியால் துடிக்கும் பெண்ணிடம் சாப்பாடு சாப்பிடு என்றுச் சொல்கிறார்? அதுவும், பேரிச்ச மரத்தை உலுக்கும் படி கேட்கிறார்? மரியாள் என்ன அந்த காலத்து கர்னம் மல்லேஸ்வரியா? பேரிச்ச மரத்தை உலுக்குவதற்கு? ஒருவேளை கர்னம் மல்லேஸ்வரியாக இருந்தாலும், பிரசவ வேதனை கொடுமையாக இருக்கும் போது, இப்படி மரத்தை பிடித்து உலுக்க முடியுமா என்பது தான் கேள்வி? அல்லாஹ்வின் ஞானம் எவ்வளவு தரம் குறைந்து காணப்படுகின்றது என்பதை பாருங்கள்.

5) மேலும், ஆரம்ப காலத்திலே மரியாளுக்கு அல்லாஹ் அற்புதமாக சாப்பாட்டை கொடுத்தார் என்று குர்-ஆன் சொல்கிறது:

குர்-ஆன் 3:37 : அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

சாதாரணமாக மரியாள் இருக்கும் போது, தானாகவே உணவை கொடுத்த அல்லாஹ், ஒரு கர்ப்பிணியாக இருந்து பிரசவ வேதனை அடையும் போது மரத்தை உலுக்கச் சொல்வது வேடிக்கையாக உள்ளது.

இன்னும் அனேக சிக்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம். யாராவது மேலதிக விவரங்கள் கேட்டால், அப்போது அவைகளை தனிக் கட்டுரையாக காண்போம்.

இப்போது விஞ்ஞானம் பற்றிய விவரத்திற்கு வருவோம்.

5) குர்-ஆனில் விஞ்ஞானம் என்ற மாயவலை

இதுவரை நாம் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்ற கருத்தில் பீஜே அவர்கள்   கொடுத்த விளக்கத்தையும், அந்த விளக்கம் எப்படி அடிப்படையற்றது என்பதையும் கண்டோம்.  குர்-ஆன் சொல்லாத ஒன்றை பீஜே போன்றவர்கள் சுயமாக கற்பனை செய்துக்கொண்டு விளக்குகிறார்கள், அல்லது மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்த விளக்கத்தை கொடுத்த பீஜே அவர்கள் உண்மையில் எதனை முடிவுரையாகச் சொல்லவருகிறார்? இப்போது அதற்கான கேள்விகளைக் காண்போம், பீஜே அவர்கள் இதற்கு பதில் அளிப்பாரா?

பீஜே அவர்களுக்கு சில கேள்விகள்:

1) பீஜே அவர்களே, உங்களின் விளக்கத்தின் படி, இயேசுவின் பிறப்பு நீருக்குள் நடந்தது என்றுச் சொல்கிறீர்களா?

2) "ஆம்", மரியாள் இயேசுவை தண்ணீருக்குள் தான் பெற்றெடுத்தார் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், அந்த குர்-ஆன் வசனங்களில் இதற்கான ஆதாரங்களை காட்டுங்கள்.

3) "இல்லை", மரியாள் இயேசுவை தண்ணீருக்குள் பெற்றெடுக்கவில்லை என்று  நீங்கள் ஒப்புக்கொண்டால், பின் ஏன் விளக்கவுரையில் இப்படி நவீன விஞ்ஞானம் என்று கதைக் கட்டி மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?

4) அல்லாஹ் மரியாளுக்காக ஒரு நீருற்றை ஏற்படுத்தியது, மரியாளின் தாகத்தை தீர்ப்பதற்காகவா, அல்லது அதற்குள் இறங்கி பிரசவ வலியை குறைத்துக் கொள்வதற்காகவா?

5) "நீர் உண்டு, பருகி" என்று 19:26ல் அல்லாஹ் சொல்வதின் அர்த்தமென்ன? "முதலில் தண்ணீர், அதன் பிறகு பேரிச்சம் பழங்கள்" என்று அல்லாஹ் அடுத்தடுத்த வசனங்களில் சொல்லி, அதன் பிறகு "நீ உண்டு பருகி" என்றுச் சொல்வதிலிருந்து, அவர் மரியாளின் பசிக்காகத்தான் நீருற்றை உண்டாக்கினார் என்பது நமக்கு புரிகின்றது அல்லவா? இங்கு விஞ்ஞானம் எங்கேயிருந்து வந்தது?

6) நீருக்குள் பிரசவம் என்பது இன்றைய கண்டுபிடிப்பாக இருந்தாலும், அது இன்னும் முழுமைப் பெறாத ஆராய்ச்சியாகவே உள்ளது, அதில் அனேக பிரச்சனைகள் உள்ளது, அதாவது பிறக்கும் குழந்தை நீருக்குள் முச்சுத் திறணி மரிக்கும் அபாயம் உள்ளது. இப்படி இருக்க, எந்த ஒரு மருத்துவச்சியின் உதவியின்றி, இதர பெண்களின் உதவியின்றி எப்படி மரியாள் நீருக்குள் சென்று குழந்தை பெற்று இருக்கமுடியும்?

7) இந்த வசனத்தில் அல்லாஹ் விஞ்ஞானத்தை வைத்திருந்தால், ஏன் அவர் தெளிவாகச் சொல்லவில்லை? அதாவது கீழ்கண்ட போல அவர் வசனங்களை ஏன் தெளிவாக இறக்கவில்லை?

"மரியாளே, நான் ஒரு நீருற்றை உண்டாக்கியுள்ளேன், அதில் நீ இறங்கினால், உன் பிரசவ வலி குறையும், நீ தண்ணீருக்குள்ளேயே குழந்தையை பெற்றேடு. தண்ணீர் பிரசவத்தில் உனக்கு உதவி செய்ய ஒரு பெண்ணை நான் அனுப்புகிறேன்" 

மேற்கண்டபடி அல்லாஹ் சொல்லியிருந்தால், இந்த நீருக்குள் பிரசவம் என்ற அறிய கண்டுபிடிப்பை, 7ம் நூற்றாண்டிலிருந்தே உலகம் பின்பற்றி இருந்திருக்குமே (நம்முடைய காலத்தில் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு கூட கிடைத்திருக்கும்). 

உண்மையில், 7ம் நூற்றாண்டிலிருந்து அல்ல, முதல் நூற்றாண்டிலிருந்தே இந்த விஞ்ஞானம் உலகிற்கு தெரியவேண்டும் என்று அல்லாஹ் நினைத்து இருந்திருந்தால், அவரால் முடிந்திருக்கும். புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவிற்கும், சீடர்களுக்கும், இதர யூதர்களுக்கும் மரியாள் சொல்லியிருந்தால், இந்த அற்புத பிரசவ யுக்தியினால் உலக பெண்கள், இத்தனை நூற்றாண்டுகளாக நன்மை பெற்று இருந்திருப்பார்கள். ஆனால், 2000 ஆண்டுகளாக, (குறைந்தபட்சம் 14 நூற்றாண்டுகளாக) இந்த அற்புதம் பற்றி அல்லாஹ் மூச்சு  விடவே இல்லை. ஏதோ பீஜே அவர்களின் புன்னியத்தினாலும், இவரைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் புன்னியத்தினாலும் இந்த அற்புதம் குர்-ஆனில் இருப்பது இப்போது தான் உலகிற்கு வெளிப்பட்டது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமியரல்லாதவர்கள் நீருக்குள் பிரசவம் பற்றி கண்டுபிடித்த பிறகு, பீஜே போன்றவர்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போது மிகவும் முக்கியமான விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, இவைகளை படியுங்கள், வேடிக்கை இன்னும் உச்சக்கட்டம் அடைகிறது. இவைகள் பீஜே அவர்களின் விளக்கவுரையின் விளைவுகள்:

அ) முதலாவது, நீருக்குள் பிரசவம் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாஹ்வினால் மரியாளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆ) மரியாள் இந்த அறிய கண்டுபிடிப்பை உலகிற்கு சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். ஆனால், மரியாள் மட்டும் நீருக்குள் இறங்கி இயேசுவை வலியில்லாமல் பெற்றேடுத்துவிட்டார்கள்.

இ) மரியாள் மறைத்த இந்த அற்புதம் பற்றி, ஏழாம் நூற்றாண்டில் அல்லாஹ் மறுபடியும் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்தி, குர்-ஆனில் பதிவு செய்துவிட்டார்.

ஈ) 7ம் நூற்றாண்டில் அல்லாஹ் எடுத்த இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது, அதாவது, கடந்த 14 நூற்றாண்டுகளாக இப்படிப்பட்ட அறிய கண்டுபிடிப்பு குர்-ஆனில் இருப்பது யாருக்குமே பொறிதட்டவில்லை. அதாவது, எந்த ஒரு இஸ்லாமிய அறிஞருக்கும் 1400 ஆண்டுகளாக இந்த கண்டுபிடிப்பு குர்-ஆனில் உள்ளது என்ற விஷயம் கூட தெரியாமலே போய்விட்டது.  எல்லாரும் என்ன நினைத்தார்கள் என்றால், மரியாளுக்கு குடிக்க தண்ணீரை அல்லாஹ் ஏற்படுத்தினான் என்றே எண்ணியிருந்தனர். மறுபடியும் அல்லாஹ்வின் வசனத்தை இவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை.

உ) கடைசியாக, இஸ்லாமியரல்லாத விஞ்ஞானிகள் அல்லது காஃபிர்கள், சுயமாக சிந்தித்து, நீருக்குள் பிரசவம் என்பதை கண்டுபிடித்த பிறகு, பீஜே போன்றவர்களுக்கு குர்-ஆனின் உண்மை (அல்லாஹ்வினால்) வெளிப்பட்டது.

பீஜே அவர்களுக்கு இப்போது தன்னுடைய தவறு என்ன என்று புரிகிறதா? புரியவில்லையானால், புரியவைக்கும்  படி அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு விளங்கினால், அடுத்த குர்-ஆன் பதிவில் அந்த விளக்க குறிப்பை நீக்கிவிடுங்கள், நீங்கள் மனசாட்சியின்  படி நேர்மையாக நடப்பவராக இருந்தால்.

 6) முடிவுரை: குர்-ஆனில் விஞ்ஞானம் என்பது நவீன இஸ்லாமிய வாதிகளின் கண்டுபிடிப்பு தான்.

குர்-ஆனில் விஞ்ஞானம் என்று ஒன்றுமில்லை. இந்த கட்டுரையை  படிக்கும் வாசகர்கள் கீழ்கண்ட கட்டுரைகளையும் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

குர்-ஆன் ஒரு வேதம் என்று மற்றவர்கள் நம்பவேண்டும் என்பதற்காக, இப்படி பொய்களை இட்டுக்கட்டக்கூடாது. பீஜே அவர்களே! நீங்கள் இட்டுக்கட்டியது என்ன ஆனது, அஸ்திபாரத்தோடு இடிந்துப்போனது. உங்களைப் போன்றவர்கள் இப்படி இல்லாத ஒன்றை இருப்பது போல சொல்வது என்பது, மிகவும் கேவலமானது. இந்த கேவலம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் அல்லாஹ்விற்கும், அவனது வேதத்திற்கும், இஸ்லாமுக்கும் தான்.

ஒருவேளை இந்த கட்டுரையைக்கு யாராவது மறுப்பு எழுதினால், நான் மேலதிக விவரங்களோடு பதில் தர தயாராக இருக்கிறேன்.

வாசகர்களே, இஸ்லாமியர்கள் உங்களிடம் வந்து குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்றுச் சொன்னால், நம்பவேண்டாம். அவர்கள் சொல்லும் விவரங்களை சரி பார்த்து செயல்படுங்கள்.

குர்-ஆன் பற்றிய கட்டுரைகள்

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு 

மூலம்: http://isakoran.blogspot.in/2013/04/blog-post_8.html

பீஜே அவர்களுக்கு மறுப்புக்கள்