குர்-ஆன் ’தல்மூத்’ ஐ எதிர்க்கிறது ’தவ்ராத்’ ஐ அல்ல!

முன்னுரை:

தவ்ராத்தும், இன்ஜிலும் மாற்றப்பட்டுவிட்டது என்று குர்-ஆன் சொல்வதாக பெரும்பான்மையான முஸ்லிம்கள் நம்புகிறார்கள். உங்கள் வாதங்களுக்கு குர்-ஆனிலிருந்து ஆதாரங்களை காட்டுங்கள்? என்று கேட்டால், அவர்களால் பதில் சொல்லமுடிவதில்லை. ஏனென்றால், தோராவையும், இன்ஜிலையும் மேலும் இதர முந்தைய வேதங்களையும் குர்-ஆன் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறது என்பது தான் உண்மை. அதே நேரத்தில் சில இடங்களில் யூதர்கள் பற்றி  சில விமர்சனங்களையும் குர்-ஆன்  முன்வைக்கிறது. இச்சிறிய கட்டுரையில், யூதர்கள் பற்றி   குர்-ஆன் முன்வைக்கும் விமர்சனங்கள் முந்தைய வேதங்களைப் பற்றியது அல்ல, அதற்கு பதிலாக ‘தல்மூத்’ என்றுச் சொல்லக்கூடிய யூத பாரம்பரிய நூல்களைப் பற்றியது தான் என்பதை குர்-ஆனின் உதவி கொண்டு பார்க்கப்போகிறோம். இந்த கட்டுரைக்கு எனக்கு பேருதவியாக இருந்தது, ஃப்ரீ மைன்ட்ஸ் (free-minds) என்ற  தளத்தின் கட்டுரையாகும்[1].

1) முந்தைய வேதங்கள் (பைபிள்) பற்றி குர்-ஆனின் நற்சாட்சி 

இன்ஜிலில் சொன்னது  போல செய்யாதவர்கள் பாவிகள்:   

குர்-ஆன் 5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (குர்-ஆன் வசனங்கள் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)

தவ்ராத்தில் அல்லாஹ்வின் கட்டளைகள் உள்ளது:

குர்-ஆன் 5:43. எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.

தவ்ராத்தையும், இன்ஜீலையும் கடைபிடிக்கவேண்டும்:

குர்-ஆன் 5:68. “வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; . . ..

குர்-ஆன் 5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

மூஸாவின் சமுதாயத்தில் நேர் வழி பெற்றவர்கள் உண்டு:

குர்-ஆன் 7:159. உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.

குர்-ஆன் முந்தைய வேதங்களை மெய்ப்படுத்துகிறது & பாதுகாக்கிறது:

குர்-ஆன் 5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. . . . .

முஹம்மது தனக்கு இறக்கப்படும் வேதம் மீது சந்தேகம் கொள்ளக்கூடாது. அப்படி அவருக்கு சந்தேகம் இருந்தால், முந்தைய வேதங்களை ஓதுபவர்களிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளட்டும்:

குர்-ஆன் 10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.

மேற்கண்ட வசனங்களைப் பற்றி முஸ்லிம்களிடம் கேட்டால், முஹம்மதுவின் காலம் வரை முந்தைய வேதங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன, அதன் பிறகு அவைகள் மாற்றப்பட்டுவிட்டன என்று ஆதாரங்கள் எதுவும் காட்டாமல் சொல்வார்கள். முஹம்மதுவிற்கு முந்தைய பரிசுத்த வேதாகமும், இன்று நம்மிடம் உள்ள வேதாகமும் ஒன்று தான் என்பதை ஆய்வு செய்பவர்கள் அறிவார்கள். முஹம்மதுவின் பெயரை யூத கிறிஸ்தவர்கள் தங்கள் வேதங்களிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்று முஸ்லிம்கள் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர்களால் ஆதாரம் காட்டமுடியாது. முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டது என்று முஸ்லிம்கள் சொன்னால், குர்-ஆன் 5:48ம் வசனம் சொல்வது பொய் என்றாகிவிடும். முந்தைய வேதங்களை பாதுகாக்க வந்த குர்-ஆன், தன் கடமையை செய்யாத போது, குர்-ஆன் எப்படி வேதமாக இருக்கமுடியும்? என்ற கேள்வி எழும்.

இப்போது இக்கட்டுரையின் கருப்பொருள் வசனங்களுக்குள் நுழைவோம்.

2) ’தல்மூத்’ஐ குற்றப்படுத்தும் குர்-ஆன் (2:79) - தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு

முஸ்லிம்கள் குர்-ஆன் 2:79ஐ குறிப்பிட்டு, இந்த வசனத்தின் படி, முந்தைய வேதங்களை அவர்கள் மாற்றிவிட்டார்கள் என்று சொல்லமுடியும் அல்லவா! என்று கேட்பார்கள். இது மிகவும் முக்கியமான வசனமாகும். குர்-ஆன் 2:79 குறிப்பிடும் வேதம் எது? என்ற கேள்விக்கு நாம் பதிலைக் காண்போம்

குர்-ஆன் 2:79

அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!

இந்த மேற்கண்ட வசனம் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுக்களை யூதர்கள் மீது சுமத்துகிறது.

1) அற்பக் கிரயத்துக்காக தம் கரங்களால் நூலை எழுதிவைத்துக்கொண்ட யூதர்கள்.

2) பின்னர், அந்த நூல் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்றுச் சொல்கிறார்கள்.

இந்த வசனம் யூதர்களின் வேதங்களாகிய தோரா, ஜபூர் போன்றவற்றை குறிப்பிடவில்லையா? என்று முஸ்லிம்கள் கேட்கலாம். நிச்சயமாக இவ்வசனம் தவ்ராத்தையும், ஜபூரையும் குறிப்பிடவில்லை, காரணம், தவ்ராத் மற்றும் இதர யூதர்களின் வேதங்களைப் பற்றி மிகவும் மேன்மையாக குர்-ஆன் குறிப்பிடுகின்றது. அவ்வசனங்களை நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கண்டோம். 

இந்த குறிப்பிட்ட குர்-ஆன் வசனம் (2:79), தல்மூத் என்றுச் சொல்லக்கூடிய யூத பாரம்பரிய நூல்களைத் தான் குறிப்பிடுகின்றது. இதற்கு சான்று எங்கே இருக்கிறது? என்று முஸ்லிம்கள் கேட்டால், நாம் படித்த 2:79ம் வசனத்தின் முந்தைய (2:78)  மற்றும் பிந்தைய (2:80) வசனங்களில் அதற்கான ஆதாரம் இருக்கின்றது.

குர்-ஆன் 2:78

2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.

வேதத்தை அறியாத எழுத்தறிவில்லாத கட்டுக்கதைகளை நம்பும் யூதர்கள் (2:78):

இந்த வசனத்தில் குர்-ஆன் என்ன சொல்கின்றது என்பதை கவனமாக படியுங்கள். தங்கள் கைகளால் நூலை எழுதிவைத்திருக்கும் அந்த யூதர்கள் வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லையாம். அவர்கள் எழுத்தறிவில்லாதவர்களாகவும், கட்டுக்கதைகளை மட்டும் அறிந்து வைத்திருப்பவர்களாகவும் இருக்கிறார்களாம். எனவே, இந்த வசனத்தின் படி, யூதர்களுக்கு வெளியாக்கப்பட்ட தவ்ராத்தை அறியாத சில எழுத்தறிவில்லாதவர்கள், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். எப்படிப்பட்ட காரியங்களை? என்று கேட்டால், குர்-ஆன் 2:79ல் சொல்லப்பட்டது போல செய்கிறார்கள் – தங்கள் கரங்களால் நூல்களை (தல்மூத்) எழுதிவைத்துக்கொண்டு, இது இறைவனிடமிருந்து வந்தது என்றுச் சொல்கிறார்கள்.

இன்னும் சிறிது தெளிவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று தோன்றுகிறதல்லவா? முழுமையான தெளிவை அடைய, குர்-ஆன் 2:80ம் வசனத்தையும் நாம் இப்போது வாசிப்போம்.

குர்-ஆன் 2:80

2:80. “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.

இந்த வசனம் கீழ்கண்ட மூன்று விவரங்களை கூறுகின்றது:

1) யூதர்களில் இப்படிப்பட்டவர்கள் “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று கூறுகிறார்கள்.

2) இப்படி சொல்லும் யூதர்களிடம் முஹம்மது, ‘அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா’ என்று கேட்கவேண்டுமாம்.

3) மேலும் அதே யூதர்களிடம் “நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று முஹம்மது கேட்கவேண்டுமாம்.

இவ்வசனத்தின் சுருக்கம் இது தான். முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்த அந்த யூதர்கள் ’ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்பு தீண்டாது’ என்று சொல்லிக்கொண்டு இருந்துள்ளனர். பொதுவாக, நரகத்திற்குச் செல்பவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.  ஆனால் எங்களை மட்டும் அந்த நெருப்பு, சில நாட்கள் மட்டும் தான் தொடும் என்று யூதர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டு, எழுதி (தல்மூத்) வைத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களிடம் முஹம்மது சென்று, ‘உங்கள் இறைவன் இப்படிப்பட்ட வாக்குறுதியை உங்களுக்கு கொடுத்தானா? அல்லது நீங்களே கற்பனை செய்துக்கொண்டு பொய்யை இறைவனின் பெயரில் சொல்கிறீர்களா?’ என்று கேட்கும் படி, இந்த வசனம் சொல்கிறது.

நாம் கண்ட மூன்று வசனங்களின் சுருக்கம் இது தான்:

 குர்ஆன்

2:78

தவ்ராத் வேதத்தை அறியாத சில யூதர்கள், அவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள் மற்றும் கட்டுக்கதையை நம்புகிறவர்களாக இருந்துள்ளார்கள்

 குர்ஆன்

2:79

இப்படிப்பட்ட யூதர்கள் தான் அற்பக் கிரயத்துக்காக தங்கள் கரங்களால் நூலை எழுதி வைத்துக்கொண்டு, இது இறைவனிடமிருந்து வந்தது என்றுச் சொல்கிறார்கள். முந்தைய வசனத்தின் படி, தவ்ராத்தை  அறியாத, எழுத்தறிவில்லாத கட்டுக்கதைகளை நம்புபவர்கள். அப்படியானால், 'தங்கள் கரங்களால் எழுதிக்கொண்ட நூல் தவ்ராத் அல்ல', ஏனென்றால், அந்த தவ்ராத்தைத் தான் அவர்கள் அறியவில்லையே!

 குர்ஆன்

2:80

எங்களை நரக நெருப்பு நித்திய காலமாக தொடராது, சில நாட்கள் மட்டுமே தொடும் என்றுச் சொல்கிறார்கள்.

இவர்களின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமில்லை, நான் (அல்லாஹ்) இப்படிப்பட்ட வாக்குறுதிகளை யூதர்களுக்கு கொடுக்கவில்லை, எனவே, நீ (முஹம்மது) அவர்களிடம் கேள்விகளை கேள் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்ட நூல்களைத் தான்  அவர்கள் (தல்மூத்ஐ) கரங்களால் எழுதிக்கொண்டு, இது இறைவனிடமிருந்து வந்தது என்று கூறிக்கொள்கிறார்கள். இம்மூன்று வசனங்களும் ஒன்றாக படித்தால் தான் விஷயம் புரியும்.

இப்போது நம் முன் நிற்கும் கேள்விகள் என்னவென்றால், மேற்கண்ட யூதர்கள் சொல்லும் அந்த விவரம் (ஒரு சில நாட்கள் மட்டுமே எங்களை நரகத்தின் நெருப்பு தொடும் என்ற விவரம்) எங்கு உள்ளது?

  • யூதர்களின் ஐந்தாகமங்களில் (தவ்ராத்தில் / தோராவில்) உள்ளதா? அல்லது
  • ஜபூரில் உள்ளதா? அல்லது
  • இதர தீர்க்கதரிசன புத்தகங்களில் உள்ளதா?

இந்த விவரம், யூதர்களின் தோரா, ஜபூர் மற்றும் இதர தீர்க்கதரிசன புத்தகங்களில் (பழைய ஏற்பாடு) இல்லை.

தல்மூத் என்ற யூத பாரம்பரிய நூல்களில் இந்த விவரம் உள்ளது:

யூதர்களின் ரபிக்கள் உருவாக்கிய தல்மூத் என்ற நூல்களில், கெஹன்னம் (நரகம்) என்ற இடத்தில், 12 மாதங்கள் தான் மனிதர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். அக்காலகட்டத்தில் அவர்களின் ஆத்துமா சுத்திகரிக்கப்படும், அதன் பிறகு அவர்களின் உடல்கள் அழிக்கப்படும், அவர்களின் ஆத்துமா பரிசுத்தமாக்கப்பட்டு ஏதோன் தோட்டத்தில் நிரந்தரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

GEHENNA (Hebr. ; Greek, Γέεννα):

There are three categories of men; the wholly pious and the arch-sinners are not purified, but only those between these two classes (Ab. R. N. 41). A similar view is expressed in the Babylonian Talmud, which adds that those who have sinned themselves but have not led others into sin remain for twelve months in Gehenna; "after twelve months their bodies are destroyed, their souls are burned, and the wind strews the ashes under the feet of the pious.

The Rabbis saw Gehenna as a place of punishment for a person who did not live a righteous life, as definded by G-d and Torah for Jews, or the seven laws of Noah for non-Jews. The majority view of the Rabbis is that punishment in Gehenna is of limited duration. The maximum punishment was believed to be 12 months. The Talmud says,in tractate "Shabbat" page 33b that "The duration of punishment in Gehenna is twelve months". This is also stated in both early and late rabbinical literature (ie, texts of the Rabbis of the Talmud). This 12 month limit is true for both Jewish and Gentile sinners ("Rosh HaShanah" 17a). This is true even of the generation of the flood, who were said to be very wicked. (Mishneh, Eduyyot 2:10; Genesis Rabbah 28:8). Though some individual Rabbis (a minority) expressed the view that certain sinners stayed in Gehenna forever, it was not the majority, accepted view.

"During the twelve-month period in Gehenna, the soul goes through a process of purification and atonement, and, as described in Midrash Pesikta Rabbati, 'After going down to Gehenna and receiving the punishment due him, the sinner is forgiven from all his iniquities, like an arrow from the bow he is flung forth from Gehenna' (Pesikta Rabbati 53:2). After this experience, the soul is sufficiently purified and able to enter the supernal postmortem realm of Gan Eden, the Garden of Eden (Exodus Rabbah 7:4)" (Raphael,Jewish Views of the Afterlife, p145)

மேலும் இம்மூன்று தொடுப்புக்களையும் பார்க்கவும்:

  1. unsettledchristianity.com/jewish-views-of-gehennagehinnom/
  2. taylormarshall.com/2008/09/heaven-and-hell-eden-and-gehenna-in.html
  3. restoringourjewishroots.blogspot.in/2009/02/what-is-jewish-view-of-hell-gehenna.html

இந்த போதனை, பழைய ஏற்பாட்டில் (தவ்ராத், ஜபூர் …) காணமுடியாது. இயேசு கூட கெஹன்னத்தில் மக்கள் நித்தியமாக துன்பம் அனுபவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே [4] தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். (மாற்கு 9:47-48)

குர்-ஆனின் படியும் மக்கள் நித்திய காலமாக நரகத்தில் இருப்பார்கள். யூதர்கள் தல்மூத் நூற்களில் சொல்வது போல 12 மாதங்கள் (தற்காலிகமாக)  தான் இருப்பார்கள் என்பதை அல்லாஹ் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தான் குர்-ஆன் 2:80ல் அல்லாஹ் அப்படிப்பட்ட யூதர்களிடம் கேள்வி கேட்கச் சொல்கிறான். இப்போது 2:80ஐ இன்னொரு முறை படித்துப் பாருங்கள், தல்மூத் நூற்களில் யூதர்கள் எழுதி வைத்திருப்பவற்றை அல்லாஹ் குற்றம் பிடிக்கின்றான் என்பதை அறியமுடியும்.

குர்-ஆன் 2:80

2:80. “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.

இதுவரை கண்ட விவரங்களின் படி, குர்-ஆன் ’தல்மூத்’ஐ எதிர்க்கிறது தோராவை அல்ல! என்பது விளங்கும். குர்-ஆனின் 2:78, 79 & 80 வசனங்கள் யூதர்களின் பாரம்பரியங்களில் உள்ள கோட்பாட்டை குற்றம் பிடிக்கிறது என்பது இதன் மூலம் விளங்கும்.

3) ’தல்மூத்’ஐ குற்றப்படுத்தும் குர்-ஆன் (3:75) - யூதனல்லாதவனின் கூலி

குர்-ஆன் தோராவை அல்ல, தல்மூத் ஐ தான் குற்றப்படுத்துகிறது என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் குர்-ஆனிலிருந்து காண்போம்.

யூதர்கள் இன்னொரு விஷயத்தைப் பற்றி இறைவன் மீது பொய்யாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதாவது ’ஒரு யூதன், யூதனல்லாதவனுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்காவிட்டாலும் இறைவன் எங்களை தண்டிக்கமாட்டான்’ என்று யூதர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்களாம். இதனை கண்டித்துத்தான், குர்-ஆன் 3:75ம் வசனம் இறங்கியது.  இவ்வசனத்தை நான்கு தமிழாக்கங்களில் படிக்கலாம். இவ்வசனத்தின் இரண்டாவது பாகத்தை கூர்ந்து படியுங்கள்.

குர்-ஆன் 3:75:

3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

3:75. (நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (யாதொரு குறைவுமின்றி) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரையில் அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) "பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை" என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

3:75. நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில்27 உள்ளனர். நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். "எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது'' என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். (பிஜே தமிழாக்கம்)

3:75. வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

யூதனல்லாதவனுக்கு நாங்கள் (யூதர்கள்) எந்த ஒரு தீமை செய்தாலும், ஏமாற்றினாலும் எங்களை இறைவன் தண்டிக்கமாட்டான் என்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் என்று அல்லாஹ் இங்கு குற்றம் சாட்டுகின்றான். இப்படிப்பட்ட போதனை நாம் பழைய ஏற்பாட்டில் காணமுடியாது. ஆனால், தல்மூத் என்ற யூத பாரம்பரிய நூல்களில் காணமுடியும்.

” தல்மூத் - சென்ஹெட்ரின் 57a”ன் படி ஒரு யூதன் யூதனல்லாத (Cuthean) ஒருவனின் கூலியை சரியான நேரத்தில் கொடுக்காமல் வைத்துக்கொள்ளலாம். (Cuthean என்பதற்கு யூதனல்லாதவன் (அ) சமாரியன் (அ) இதர விக்கிர ஆராதனைக்காரன் என்று யூதர்கள் பொருள் கூறுகிறார்கள். குர்‍ஆனில் காஃபிர்கள் என்றுச் சொல்வார்களே அது போல.)

It applies to the withholding of a labourer's wage.44  One Cuthean from another, or a Cuthean from an Israelite is forbidden, but an Israelite from a Cuthean is permitted.

ஒரு அந்நியன் யூதனின் அல்லது இதர மக்களின் கூலியை கொடுக்காமல் வைத்துக்கொள்ளக்கூடாது. . . ஆனால், ஒரு இஸ்ரவேலன் ஒரு அந்நியனின் கூலியை கொடுக்காமல் வைத்துக்கொள்ளலாம், இது அனுமதிக்கப்பட்டுள்ளது. . . .

(எப்படி ஹதீஸ்களின் உண்மை நிலை பற்றி பலவகையான விவாதங்கள் இஸ்லாமில் நடந்துக்கொண்டு இருக்கிறாதோ, அதே போல யூத பாரம்பரிய நூல்களின் சட்டங்கள் பற்றியும் அனேக விவாதங்கள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. மேற்கண்ட தல்மூத் சட்டம் பற்றிய விளக்கத்தை கீழ்கண்ட தொடுப்பில் கொடுத்துள்ளார்கள்: http://talmud.faithweb.com/articles/wages.html இக்கட்டுரையின் நோக்கம், தல்மூத் சட்டங்களில் எந்த சட்டம் சரியானது, எது தவறானது என்பதை ஆய்வு செய்வதல்ல‌).

ஆக, குர்-ஆன் 3:75 சொல்லும் குற்றச்சாட்டு, யூத பாரம்பரிய நூல்களிலிருந்து வெளிப்பட்ட சட்டத்தைப் பற்றியது தான் என்பது நமக்கு விளங்கி இருக்கும். பழைய ஏற்பாட்டின் படி அல்லது தவ்ராத்தின் படி, ஒரு யூதன் எந்த ஒரு மனிதனின் கூலியையும் தன்னிடம் வைத்துக்கொள்ளக்கூடாது. தேவன் தவ்ராத்தில் யூதர்களுக்கு கட்டளையிடும் போது, யூதனல்லாத‌  அந்நியரின் கூலியை பொழுதுபோகுமுன்னே கொடுத்துவிடவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். ஆனால், தல்மூத் சொல்வது தவ்ராத்திற்கு எதிரானதாக உள்ளது. இதையே குர்-ஆன் 3:75 கேள்வி கேட்கிறது.

உபாகமம் 24:14  உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

உபாகமம் 24:15  அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

லேவியராகமம் 19:13  பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

ஆக, குர்-ஆன் 3:75 ல் அல்லாஹ் முன்வைத்த குற்றச்சாட்டு என்பது தல்மூத் என்ற யூத பாரம்பரியங்களில் கொடுக்கப்பட்ட சட்டங்கள் பற்றியதாகும், தவ்ராத் பற்றியதல்ல.

முடிவுரை:

யூதர்கள் தங்கள் கரங்களால் எழுதிய நூலை காண்பித்து இது தான் இறைவன் கொடுத்த நூல் என்று சொன்னதாக குர்-ஆன் (2:78,79,80 வசனங்க‌ள்) கூறும் குற்றச்சாட்டு, யூதர்களின் பாரம்பரிய நூல்களாகிய தல்மூத் போன்றவைகள்  பற்றியது என்பதை இந்த கட்டுரையில் பார்த்தோம். முஹம்மதுவின் காலத்தில், எப்படி தவ்ராத் மற்றும் இதர யூத கிறிஸ்தவ வேத நூல்கள் பரவலாக படிக்கப்பட்டு, பேசப்பட்டதோ, அதே போல, யூதர்களின் பாரம்பரிய நூல்களும் அதிகமாக பேசப்பட்டது.

மேலும், தவ்ராத் (தோரா), ஜபூர் (சங்கிதம்) மற்றும் இன்ஜீல் (நற்செய்தி நூல்கள்) பற்றி குர்-ஆன் மிகவும் மேன்மையாக பேசுகின்றது. குர்-ஆனில் சில வசனங்கள் முந்தைய வேதங்களை உயர்த்தியும், சில வசனங்கள் அவைகளை குற்றப்படுத்தியும் பேசுமானால், குர்-ஆன் முரண்படுகின்றது என்று சொல்லலாம் அல்லவா! முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று சொல்லும் ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை சிலுவையில் அறைந்து கொல்கின்றான் (அவமானப்படுத்துகின்றான்) என்று அர்த்தமாகின்றது. இந்த கட்டுரையை பற்றி முஸ்லிம் வாசகர்களின் விமர்சனங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

அடிக்குறிப்புக்கள்:

[1] ஃப்ரீ மைன்ட்ஸ் தளம்: free-minds.org/forum/index.php

[2] Hebrew - Gehenna: en.wikipedia.org/wiki/Gehenna

Gehenna (/ɡɪˈhɛnə/; Ancient Greek: γέεννα), from the Hebrew Gehinnom (Rabbinical: גהנום/גהנם)

[3] Islam - Jahennam: en.wikipedia.org/wiki/Jahannam

Jahannam: Jahannam (Arabic: جهنم‎‎ (etymologically related to Hebrew גיהנום Gehennom and Greek: γέεννα) is one of the names for the Islamic concept of Hell. 

[4] Greek - geenna

G1067 - γέεννα

geenna - gheh'-en-nah

Of Hebrew origin ([H1516] and [H2011]); valley of (the son of) Hinnom; gehenna (or Ge-Hinnom), a valley of Jerusalem, used (figuratively) as a name for the place (or state) of everlasting punishment: - hell.


உமரின் குர்-ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

ஆன்சரிங் இஸ்லாம் குர்-ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்