இஸ்லாமியர்களின் மீது யுத்தம்

சாமுவேல் கிரீன்

அறிமுகம்

இஸ்லாமுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் எதிராக யுத்தம் நடந்து கொண்டிருப்பதாக அநேகர் நினைக்கின்றார்கள். உலக வல்லமைகளாக இருக்கும் நாடுகளும் இதர பிரிவுகளும் தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி எடுக்கும்போது, உலகின் அநேகப் பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்படுகிறவர்களில் நிச்சயமாக இஸ்லாமியர்களும் இருக்கின்றனர். இஸ்லாமுக்கு எதிராக அல்லது ஆதரவாக விவாதிக்கும் போது சில நேரங்களில் வார்த்தைப் போர்களும் நடக்கின்றன, இன்னும் அநேக முஸ்லிம்கள் மற்ற‌ முஸ்லிம்களோடு போரிடுகின்றனர். இது மிகவும் சிக்கலான‌ சூழ்நிலை. குர்‍ஆனும் சுன்னாவும் எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் போருக்கு பங்களிக்கின்றன என்றும் மற்றும் இந்தச் சூழ்நிலையைப் பற்றி நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்) என்ன போதிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்

குர்‍ஆன்:

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (குர்‍ஆன் 2:278-279)

மேலே உள்ள வசனங்களின் சந்தர்ப்பமானது, சில முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்களாவதற்கு முன்பு அவர்கள் கொடுத்திருந்த பணத்திற்கு வரவேண்டிய வட்டியை, அவர்கள் முஸ்லிம்களாகிவிட்ட பிறகு வசூல் செய்துக்கொள்ள விரும்பினார்கள் என்பதாகும். அவர்கள் வட்டி வாங்க விரும்பினால் அல்லாஹ்வும் முஹம்மதுவும் அவர்கள் மீது போர் தொடுப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டனர். இதே போல உள்ள இன்னொரு கட்டளையை நாம் குர்‍ஆன் 9:73 ல் பார்க்கிறோம்.

நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது. (குர்‍ஆன் 9:73)

இவ்வசனம் இறக்கப்பட்ட சந்தர்ப்பமானது, முஹம்மது ஜிஹாத் செய்வதற்கு முஸ்லிம்களை அழைக்கிறார். சில முஸ்லிம் இனங்கள் சண்டையிட விரும்பாமலிருந்தார்கள் (ஜிஹாத் செய்ய விரும்பவில்லை), எனவே அவர்கள் மாயக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் ஜிஹாத்தில் இணையும் வரை அவர்களோடு முஹம்மது போர் புரிவார் .

மீண்டும் 49:9 ல் ஒரு முஸ்லிம் குழுவோடு அவர்கள் “அல்லாஹ்வின் கட்டளைக்குத் திரும்பும் வரை” யத்தம் செய்ய முஹம்மது கட்டளையிடுகிறார் என்று நாம் பார்க்கிறோம்.

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள் ; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். (குர்‍ஆன் 49:9)

சுன்னா:

ஆல்கஹால் பயன்படுத்துவதை நிறுத்தாத முஸ்லிம்கள் மீது உண்மையான முஸ்லிம்கள் போர் தொடுக்க முஹம்மது கட்டளையிட்டார்.

தைலம் அல் – ஹிம்யரி (Daylam al-Himyari) கூறியதாவது: நான் நபியினிடத்தில் (அவர் மீது சமாதானம் உண்டாவதாக‌) கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே நாங்கள் ஒரு குளிர் பிரதேசத்தில் இருந்து கடினமான வேலைகளை செய்கிறோம் எங்கள் தேசத்தின் குளிரை சமாளிப்பதற்கும் எங்கள் வேலைக்கு தேவையான சக்தியை நாங்கள் பெறுவதற்கும் கோதுமையிலிருந்து ஒரு பானத்தை தயாரிக்கிறோம். அவர் என்னிடம் கேட்டார் : அது போதையூட்டக் கூடியதா? நான் சொன்னேன்: ஆமாம். அவர் சொன்னார்: நீ அதை தவிர்க்க வேண்டும். நான் சொன்னேன்: ஜனங்கள் அதை கைவிடமாட்டார்கள். அவர் சொன்னார்: அவர்கள் அதை கைவிடவில்லை என்றால் அவர்களோடு யுத்தம் பண்ணு (அபூ தாவுத் - Abu Dawood: book 26, no. 3675, Hasan)

பொய் முஸ்லிம்களின் மசூதிகளை அழித்துப் போடும் படி முஹம்மது உண்மையான முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் தபுக் என்ற ஊரை தாக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது எதிரி மசூதியின் உரிமையாளர்கள் அவரிடம் வந்து, “ நாங்கள் வியாதியுள்ளவர்களும் தேவையுள்ளவர்களும் மோசமான சீதோஷ்ண நிலையில் இரவிலே தங்குவதற்காக ஒரு மசூதியைக் கட்டியிருக்கிறோம், நீங்கள் வந்து எங்களுக்காக தொழுகை செய்யும் படி விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அவர், தான் பிராயணத்திற்காக ஆயத்தப்பட்டிருப்பதாகவும், நேரமில்லாமலிருப்பதாகவும் கூறினார்…. மேலும் திரும்பி வரும்போது இறைவன் நாடினால் அவர்களிடம் வந்து அதில் அவர்களுக்காக தொழுகை செய்வதாகவும் கூறினார். அவர் துஅவன் என்ற இடத்திற்கு வந்த போது, அந்த மசூதியின் செய்தி அவருக்கு எட்டினது, உடனே அவர் மாலிக் பி. துக்ஷும் ... மற்றும் மஅன் பி. அதீ ஆகியோரை அழைத்து அந்த தீய‌ மனிதருடைய மசூதிக்குச் சென்று அதை அழித்து எரித்தும் போடும் படி சொன்னார்…. அந்த இருவரும் ஜனங்கள் இருந்த அந்த மசூதிக்கு ஓடிச் சென்று அதை எரித்து அழித்துப் போட்டார்கள், ஜனங்கள் அங்கிருந்து சிதறியோடினார்கள். (இபின் இஷாக் - Ibn Ishaq, Sirat Rasul Allah, p. 609)

முஹம்மது மரித்த பிறகு ஜக்காத் (வரி) கொடுக்காத முஸ்லிம்கள் மீது அபூ பக்கர் கூட‌ போர் தொடுத்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார். (புகாரி - பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1399)

முஸ்லிம்கள் மீது முஹம்மதுவின் யுத்தம்

இஸ்லாமின் எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாத மற்ற‌ முஸ்லிம்களோடு நம்பிக்கையான முஸ்லிம்கள் போர் செய்யவேண்டும் என்று குர்‍ஆனின் மற்றும் சுன்னாவின்(ஹதீஸ்கள்) மேற்கண்ட வசனங்கள் மற்றும் விவரங்கள் தெளிவுப்படுத்துகின்றன. இது ஜிஹாத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும் (அங்கமாகும்). ஜிஹாத் என்பது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான போர் மட்டுமல்ல, இது முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் போருமாகும். இதனால் தான் தாலீபான், அல்கெய்தா மற்றும் இதர இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் முஸ்லிம்களை தாக்குகிறார்கள். அவர்கள் தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றும், மற்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தின் (ஷரியா) எல்லா கட்டளைகளையும் கடைபிடிக்கும் வரை அவர்களோடு யுத்தம் செய்ய வேண்டியது தங்களுடைய கடமையென்றும் எண்ணுகிறார்கள்.

முஸ்லிம்கள் மீது இஸ்லாமியர்கள் போர்தொடுப்பது ஒன்றும் புதிது அல்ல. இது முஹம்மதுவின் காலத்திலிருந்து இருந்து வருகிறது. இஸ்லாமின் தொடக்கத்திலிருந்து முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கொன்றும் படுகொலை செய்தும் வருகிறார்கள். முஸ்லிம் அல்லாத நாடுகள் இந்த யுத்தத்தை தொடங்கவில்லை எனவே அவர்களால் இதை நிறுத்தவும் முடியாது. முஸ்லிம் அல்லாத நாடுகளின் தலைவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் எல்லா நிலைகளையும் அமுல்படுத்தாத இஸ்லாமியத் தலைவர்களை ஆதரிக்கும் போது தெரிந்தோ தெரியாமலோ அவர்களும் இந்த யுத்தத்தில் ஒரு பக்கத்தில் நிற்கிறார்கள்.

இந்த கட்டளைகளோடு வாழ்வது:

“சரியாக வழிநடத்தப்படும் முஸ்லிம்கள் தாங்கள் தான்" என்று நம்பும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய சட்டத்தின் எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாத மற்ற முஸ்லிம்களோடு யுத்தம் செய்ய குர்‍ஆனும் சுன்னாவும் கட்டளை கொடுக்கிறது. இந்த கட்டளையானது வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் இறைவன் உயர்த்தப்பட்டு அவருடைய வார்த்தையின் படி எல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு உன்னதமான சரியான விருப்பத்திலிருந்து வருகிறது. ஆனால், பிரச்சனை என்னவென்றால், இப்படிப்பட்ட அதிகாரத்தை மற்றவர்கள் மீது செலுத்த ஒரு தனி மனிதனுக்கு அதிகாரம் உண்டு என்று நாம் யாரையும் நம்பமுடியாது.

முஸ்லிம்கள் தாங்கள் தான் “உண்மையான முஸ்லிம்கள்” என்று நம்பும் போது அவர்களுடைய விருப்பத்தை மற்ற முஸ்லிம்கள் மீது திணிக்கிறார்கள், இது இறைவனை உண்மையாகத் தொழுது கொள்வதற்கு அல்ல மாறாக கொடூரத்திற்கும் சீர்கேட்டிற்கும் வழிநடத்துகிறது. உலகில் அநேக முஸ்லிம்கள் இந்த “தாங்களே உண்மையாக முஸ்லிம்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்கிற மற்ற‌ முஸ்லிம்களினால் அதிகமாக கொடூரத்திற்கும், வன்முறைக்கும் ஆளாகிறார்கள். (உதாரணத்திற்கு இந்த செய்திகளை படித்துப் பாருங்கள்: 1, 2, 3, 4).

அநேக இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய குழுக்கள் தங்கள் நாட்டு அரசாங்கங்கள் போதுமான அளவிற்கு இஸ்லாமிய வழியில் இல்லை என்று சொல்லி அவைகளை கவிழ்த்துவிடுகின்றன‌. அங்கே ஒரு முடிவில்லாத ஒரு கட்டுப்பாட்டிற்குள் அடங்காத யுத்தம் நடக்கிறது. ஒரு போதும் அடைய முடியாத ஒரு இஸ்லாமிய தூய்மையை நிறுவுவதற்காக, இதர‌ இஸ்லாமியர்களோடு ஒத்துப்போகாத "தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள்" என்று சொல்லிக்கொள்கிறவர்கள் மற்ற இஸ்லாமியர்களோடு யுத்தம் செய்கிறார்கள்.

“சரியாய் வழிநடத்தப்படும்” முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களோடு யுத்தம் பண்ண வேண்டும் என்ற இந்த கட்டளையானது இஸ்லாமுக்கும் உலகத்திற்கும் ஒரு பேரழிவு ஆகும். இந்த கட்டளையானது ஜனங்கள் இறைவனைத் தொழுது கொள்ளாமலிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை மாறாக ஏராளமான பிரச்சினைகளை உருவாக்கி இந்த உலகத்தில் இறைவனுடைய பெயர் தூஷிக்கப்படுவதற்கு வழி வகுக்கிறது.

ஏன் இந்தக் கட்டளை சரியாக வேலை செய்யவில்லை?

இறைவன் தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றி என்ன கூறியிருக்கின்றார்?

இந்த அதிகாரங்களைக் கொடுத்து மனித இனத்தை நம்பமுடியாது என்று முஹம்மதுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலமாக இறைவன் வெளிப்படுத்தி விளக்கியிருக்கிறார். இஸ்ரவேல் மற்ற நாடுகளுக்கு மத்தியில் தேவனுடைய கட்டளைகளின் படி நடந்து அவருடைய பெயரை உயர்த்துவதற்காகவே குறிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதை நிறைவேற்றத் தவறினார்கள். இன்னும் அவர்களை தேவனுடைய கட்டளைகளுக்கு நேராக திருப்பிய அவர்களின் பெரிய இராஜாக்களான யோசாபாத், எசேக்கியேல், யோசியா போன்றவர்கள் கூட இதை வெற்றிகரமாக செய்து முடிக்கவில்லை. ஆனால், இதற்காக நாம் வெறுமனே இஸ்ரவேலை குற்றம் சாட்டக் கூடாது.

ஜனங்களாகிய நமக்குள் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், உண்மையாக நாம் இருக்கும் நிலையைவிட நம்மை சிறந்தவர்களாக எண்ணிக் கொள்வது தான். நாம் மற்றவர்களைக் காட்டிலும் நம்மை சிறந்தவர்களாகவும், நியாயத்தீர்ப்பில் நிற்கமுடியும் என்றும் எண்ணுகிறோம். ஆனால் இயேசு நம்மை இவ்வாறு எச்சரிக்கிறார்.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? (மத்தேயு 7:1-4)

எனவே யூதர்கள் இறைவனுக்காக‌ வாழ முடியால் தோற்றுப்போனதை காரணம் காட்டி, அவர்கள் மீது குற்றம் சுமத்தி, நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்கிறோம் என்று எண்ணக்கூடாது. நாமும் அவர்கள் வாழ்ந்ததைப் போலவே வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ மற்றவர்களை இறைவனுடைய கட்டளைகளை கடைபிடிக்கும் படி கட்டாயப்படுத்திய போது தோற்றுப்போய் கொடூரத்திலும் இறைவனுடைய பெயர் தூஷிக்கப்பட்டதிலும் போய் முடிந்திருக்கின்றன என்பதை நமக்கு கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமின் சரித்திரம் காட்டுகிறது.

மனிதர்கள் இந்த பூமிக்கு இறைவனுடைய ஆட்சியை கொண்டுவர முடியாது ஏனென்றால் நாம் எல்லாருமே தீயவர்களும் தோற்றுப்போனவர்களுமாக இருக்கிறோம்.

…வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, (ரோமர் 3:22,23)

என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? (நீதிமொழிகள் 20:9)

எந்த ஒரு மனிதனானாலும் சரி, அவர் முஹம்மதுவாக இருந்தாலும் சரி, அவரிடம் பாவ சுபாவம் இருக்கும் என்று குர்ஆனும், சுன்னாவும் அங்கீகரிக்கின்றன.

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; … (குர்‍ஆன் 16:61, மற்றும் பார்க்க குர்‍ஆன் 12:53).

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக ... (குர்‍ஆன் 47:19)

அபூ மூஸா(ரலி) அறிவித்தார் .

என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். (சஹீஹ் புகாரி - பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398)

மேசியாவின் வாக்குறுதி:

சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார். ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. (ஏசாயா 59:15-16)

இறைவனுடைய அரசாங்கத்தை உண்மையாக கொண்டு வரக் கூடிய ஒருவனும் இல்லாததினால், மேசியாவை அனுப்புவதாக இறைவன் வாக்கு உரைத்தார்.

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந் தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். (ஏசாயா 11:2-5)

மேசியாவைப் பற்றி ஏராளமான அருமையான காரியங்களை இறைவன் சொல்லியிருக்கிறார். எனவே நீங்கள் எல்லாத் தீர்க்கதரிசனங்களையும் சுவிசேஷங்களையும் படித்து மேசியாவைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளும் படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். வரும்நாட்களில் நான் அவரைக் குறித்த எல்லா வசனங்களையும் ஒன்று திரட்டிக் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நம்முடைய ஒரே நம்பிக்கை அந்த மேசியா தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை இறைவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள கட்டாயப்படுத்த முடியும் என்று எண்ணி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இறைவன் அதை விரும்புவதில்லை.

இருப்பினும், நம்முடைய தோல்வியைக் குறித்தும் மேசியாவின் மகிமையான வாக்குத்தத்தைக் குறித்தும் இறைவனுடைய தெளிவான போதனைகள் இருந்தும், “சரியாக வழிநடத்தப்படும்” முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களோடு போர் செய்ய வேண்டும் என்று முஹம்மது ஓதியிருக்கிறார். இது தீர்க்கதரிசிகளும் சுவிசேஷகங்களும் சொல்லியிருக்கிறவைகளுக்கு எதிரானதாகும். முஸ்லிம்கள் மேல் முஹம்மதுவின் யுத்தமானது இலட்சக்கணக்கில் உள்ளோருக்கு உபத்திரவத்தை கொண்டுவந்திருக்கிறது. இவ்விதமாக பூமியிலே தன்னுடைய ஜனங்கள் தன்னுடைய அரசாங்கத்தை நிறுவவேண்டும் என்று இறைவன் விரும்பவில்லை. இது கடந்த காலத்தில் இப்படிப்பட்ட முயற்சியை செய்து தோற்றுப்பனவர்களுடைய நிலையை திரும்ப நடப்பிப்பது ஆகும்.

முடிவுரை

நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே அவருக்காகவே வாழவும் அவருடைய வார்த்தையின் படியே செய்யப்படுவதுமாயிருப்பது சரியானதும் ஒழுக்கமானதுமாகும், ஆனால் நாம் அதை நம்முடைய வழியில் அல்ல இறைவனுடைய வழியிலே நிறைவேற்ற வேண்டும். இறைவனுடைய வழியானது மேசியாவை அனுப்பி அவரை பின்பற்றுவதற்கு நம்மை அழைப்பதாகும். வேறு யாரையும் பின்பற்றாதீர்கள். நீங்கள் மேசியாவை பின்பற்ற முடியும். இப்படியான ஒரு ஜெபத்தை செய்யுங்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீரே உண்மையான ஜீவிக்கிற தேவனாயிருக்கிறீர், நான் உம்முடைய வழியில் வாழ வில்லை என்பதை அறிக்கையிடுகிறேன் அதற்கு உம்முடைய உதவி எனக்கு தேவை மேசியாவை நீர் அனுப்பியதற்காக‌ நன்றி அந்த மேசியாவை பின்பற்றி அவரிடத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும். ஆமென்.

இப்போது மேசியாவிடமிருந்து கற்றுக்கொள்ள இந்த நற்செய்தி நூலையும், மற்ற எல்லா தீர்க்கதரிசிகளையும் படியுங்கள்.

நூற்பட்டியல்:

1) அபூ தாவுத் ஹதீஸ் (ஆங்கிலம் - Sulaiman Abu Dawud, Sunan Abu-Dawud (translator: Prof. Ahmad Hasan)).

2) சஹீஹ் புகாரி - தமிழ்.

3) இபின் இஷாக் - சிரத் ரசூலல்லாஹ் - Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (translator: A. Guillaume), Karachi: Oxford University Press, 1998.

4) குர்ஆன் - முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிடு

ஆங்கில மூலம்: THE WAR ON MUSLIMS


சாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்