அன்புள்ள அப்துல்லாவிற்கு கிறிஸ்தவ நண்பன் எழுதும் கடிதம் 1

ஆசிரியர்: ஜெரார்ட் நெல்ஸ்

[இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே தெளிவை உண்டாக்க உதவும்படிக்கு எழுதப்பட்ட கற்பனை உரையாடல் கடிதம் ஆகும். "அப்துல்லா" என்ற பெயர் அரபி மொழி பெயராகும், இதன் பொருள் "அல்லாஹ்வின் அடிமை/ஊழியன்" என்பதாகும். இந்த கடிதங்களை எழுதும் ஆசிரியரின் பெயர் "தியோபிலஸ்" என்பதாகும், இது ஒரு கிரேக்க மொழி பெயராகும், அதன் பொருள் "இறைவனால் நேசிக்கப்பட்டவன்" என்பதாகும்.]

அன்புள்ள அப்துல்லா,

நான் உன்னை சந்தித்ததில் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் என்பதை தெரிவிப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒரு இஸ்லாமியனாகிய நீயும், கிறிஸ்தவனாகிய நானும் சந்தித்து பேசிக்கொண்டது போல எல்லாருக்கும் சம்பவிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. எந்த ஒரு பெரிய வித்தியாசமுமே இல்லை என்பதாகக் காட்டிக் கொள்ளாமல், நாம் நம் இருவருக்கும் பொதுவான பல காரியங்களைக் கண்டு கொண்டோம். நாம் நம் நம்பிக்கைகளுக்கு இடையேயான வித்தியாசங்களையும் மற்றும் அவைகளை முழுமையாக ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறோம். நம் விவாதம் நட்புணர்வுடனும், தலைப்பிற்கு பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும் என்ற நம் உறுதிமொழியை, முற்றிலும் மனதுக்கு இனியதானதாக நான் கருதுகிறேன். இதன் மூலமாக இறைவன் உயர்த்தப்படுவாராக.

வாழ்க்கையைக் குறித்த எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நம் இருவருக்கும் ஒன்றுபட்டு இருப்பதை உணர்ந்து கொள்வது நல்லது. குறிப்பாக, இறைவனைப் பற்றிய நமது உணர்வு என்னை ஈர்க்கிறது. மார்க்க சித்தாந்தங்கள் பற்றிய நம் புரிதல் வேறுபடலாம் என்ற போதிலும், இறைவனைக் குறித்த உள்ளுணர்வு, அன்பு மற்றும் விருப்பம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றுபோல காணப்படுகிறது. இது எனக்கு உணர்த்தும் காரியம் என்னவெனில், மனிதன் இயற்கையாகவே இறைவனைக் குறித்த உள்ளார்ந்த அறிவைப் பெற்றிருக்கிறான், அதை அவரே நம் இருதயங்களில் வைத்திருக்கிறார் என்பதே.

இறைவனுடைய பார்வையில் நாம் சுத்த இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியத்தை நாம் இருவரும் நன்கறிந்து இருக்கிறோம் என்ற உண்மை இத்துடன் தொடர்புடையதாகவும் எனக்கு மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே இறைவனைக் காண்பார்கள் (மத்தேயு 5:8) என்று இயேசு ஒரு முறை கூறியிருப்பது போல இது மிகவும் முக்கியமானதாகும். இது எனக்கு கீழ்கண்ட வசனங்களை ஞாபகப்படுத்துகிறது:

இது எனக்கு கீழ்கண்ட வசனங்களை ஞாபகப்படுத்துகிறது:

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். (1 பேதுரு 1:14,15)

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. (எபிரேயர் 12:14)

நம்மிடம் உள்ளான பரிசுத்தம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். நம்முடைய சிந்தனைகளும், செயல்களும் பெரும்பாலும் பரிசுத்தமில்லாததாகவே காணப்படுகிறது. நாம் எவ்வளவு தான் மத சடங்குகளை சட்டங்களை பின்பற்றினாலும், நம் இருதயத்தின் ஆழத்தில் நம் குறைபாட்டினால் உண்டான ஆன்மீகக் குறை குறித்து அறிந்திருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். மரணத்துடனான ஒவ்வொரு சந்திப்பு அல்லது எதிர்கொள்ளலும் நமக்குள் பிரச்சனைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன. அவை மரணத்தைக் குறித்த பயத்தை நமக்குண்டாக்குகிறது - அல்லது மரணத்துக்குப் பின் என்ன நேரிடும் என்பதைக் குறித்த பயத்தை உண்டாக்குகிறது. இறைவனைத் தள்ளி விட்ட சூழ்நிலையில் ஒருவன் வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக வாழலாம், ஆனால் இறுதியில் மரணத்தைக் குறித்த எதிர்பார்ப்பு அவை எல்லாவற்றையும் பாழாக்கிவிடுகிறது. ஏனெனில் நாம் அனைவரும் பின்வரும் வேத கூற்றை அறிந்திருக்கிறோம்;

ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயந்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது (எபிரேயர் 9:27)

இறுதியாக மனுக்குலமனைத்தும் ஒரே படகில்தான் அமர்ந்திருக்கிறோம். சிந்தனை, செயல் மற்றும் வார்த்தை ஆகிய அனைத்திலும் நாமனைவரும் இறைவனுடைய பார்வையில் குறைவுள்ளவர்களாகவே இருக்கிறோம்.

இந்தச் சூழலில் சுத்திகரிப்பை முக்கியப்படுத்துகிற மதச் சடங்காச்சாரங்களை எல்லா மதங்களும் பின்பற்றுகின்றன என்பதைக் குறிப்பிடுவது மிகவும் ஆச்சரியமானதாயிருக்கிறது அல்லவா? இவை வெறும் அடையாளச் சின்னங்களே அன்றி எந்த ஒரு மாற்றத்தையும் உண்டாக்காதவை ஆகும். இந்த சடங்காச்சாரங்களினால் நம்முடைய உடலை வெளிப்பிரகாரமாக நாம் சுத்தப்படுத்திக்கொண்டாலும், தண்ணீர் பாவத்தைக் கழுவி, ஒரு சுத்த இருதயத்தை உண்டாக்க முடியாது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவும் மத சடங்காச்சாரத்தை ஒரு முறை இயேசு எதிர்க்கொள்ளும் போது, கீழ்கண்ட வார்த்தைகளைச் சொன்னார்:

அதற்கு இயேசு நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து

பொல்லாத சிந்தனைகளும்,
கொலைபாதகங்களும்,
விபசாரங்களும்,
வேசித்தனங்களும்,
களவுகளும்,
பொய்ச்சாட்சிகளும்,
தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். (மத்தேயு 15:16-20)

மதச் சடங்குகள் என்பவை, நாம் பரிசுத்தமற்றவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிற படியால், நமக்கு சுத்திகரிப்பு தேவை நினைவுபடுத்தும் ஒன்று என்பதேயன்றி வேறல்ல. தாவீது குறிப்பிட்ட ஒரு கேவலமான பாவத்தை செய்துவிட்ட பிறகு, தன்னுடைய விருப்பத்தை தன் சங்கீதத்தில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக வெளிப்படுத்துகின்றார்.

தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்;
நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். (சங்கீதம் 51:1-4, 9-10)

இதுவரை பார்த்த விவரங்களை நாம் இருவரும் அங்கீகரிப்போம் என்றும் இவைகளை நாம் உணர்ந்துள்ளோம் என்றும் நான் நம்புகிறேன். எனினும் நாம் ஒத்துப்போக விரும்பாத தலைப்புகள் இன்னும் பல உண்டு. ஆன்மீக உரையாடல்களில் நம் பரஸ்பர நம்பிக்கைகளின் படி விவாதிப்பது இயற்கைதான். ஒருவர் இவ்விதமாக கூறினார், அதாவது "நம்முடைய திட நம்பிக்கைகள் பொய்களுக்கு எதிரிகளாக இருப்பதைக் காட்டிலும், உண்மைக்கு அதிகமாக எதிரிகளாக இருக்கின்றன". "திட நம்பிக்கைகள்" கருத்துக்களைக் காட்டிலும் ஒரு படி மேலே இருக்கின்றன.இந்த அடிப்படையில் விவாதங்கள் முன் அனுமானிக்கக் கூடியவைதான் : "எல்லாரும் பேசுவார்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்". நாம் இப்படிப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றக் கூடாது. நம் பதிலானது விவாதம் எழுப்பிய கேள்வியை நேர்மையாக எதிர்கொள்வதாகவும், எது நம்பத்தக்கது, ஏன் அதை நம்ப வேண்டும் என்பதை நாம் இருவரும் சேர்ந்து கண்டுகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது நம் நித்தியத்தை பாதிக்கிற காரணியாக இருக்கிறது. ஆகவே நாம் நம் தேடலில் மேலோட்டமாக இருக்கத் துணியக் கூடாது. நம்மில் ஒருவர் வழிவிலகிப் போய்விடுவார் என்கிற சூழலை நாம் விரும்ப வில்லை. இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாட்டின் மீது நம் நம்பிக்கை அமையாதவரையில், நாம் இக்கட்டான நிலையிலிருப்போம். அனைத்திற்கும் மேலாக, நாம் இறைவனின் உண்மையைப் பின்பற்றி அதை நம்புவோமாகில், நித்தியத்தை இழந்து போவது குறித்து நாம் பயப்பட என்ன இருக்கிறது? தெய்வீக உண்மை கண்டு கொள்ளக் கூடியதாகவும், ஆதாரச் சான்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

இப்பொழுது நாம் ஒருவரையொருவர் ஓரளவுக்கு அறிந்திருக்கிறோம். ஆகவே நாம் இருவரும் சேர்ந்து வெறுப்பின்றி, புரிந்து கொள்ளுதல் மற்றும் தெளிவான எண்ணத்துடன் இந்த உலகில் இருக்கும் எதைக்காட்டிலும் மிகவும் அதிக முக்கியமானதாக நாம் கருதுகிறதைக் கண்டு கொள்வோம் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு உண்மையுடன்
தியோபிலஸ்

ஆங்கில மூலம்: Dear Abdulla - Letter 1

ஜெரார்ட் நெல்ஸ் அவர்களின் கட்டுரைகள்

பட்டியல்

இரண்டாம் கடிதம்