தமீம் அன்சாரிக்கு உம‌ர் பதில்: முஹம்மதுவின் மனைவிகள் முஸ்லிம்களின் அன்னையர்கள்! அப்படியானால்....

(மத்தேயு 23:9 vs குர்‍ஆன் 33:6)

"தமீம் அன்சாரி" என்று ஒரு இஸ்லாமிய சகோதரர் ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலிருந்து ஒரு பின்னூட்டத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அதாவது மத்தேயு 23:9ம் வசனத்தைப் பற்றிய ஒரு விளக்கத்தை (கேலியாக) அனுப்பியிருந்தார். 

இந்த வசனம் பற்றி நம் தளத்தில் கொல்வின் சகோதரர் ஏற்கனவே ஒரு பதிலை சுருக்கமாக‌ பதித்து இருந்தார், எனவே, அந்த பதிலை இந்த இஸ்லாமியருக்கு இங்கு தருகிறேன். மேலும், இஸ்லாமியர்களின் லாஜிக் எப்படி அவர்களுக்கே தலைவலியாக அல்லது பிரச்சனையாக மாறுகிறது என்பதையும் இதே கட்டுரையில் விளக்குகிறேன். 

இந்த கட்டுரையில் கீழ்கண்ட தலைப்புகளில் நாம் விவரங்களை காண்போம். 

  1. இஸ்லாமியர் தமீம் அன்சாரி அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்
  2. சகோதரர் கொல்வின் அவர்களின் பதில்
  3. இஸ்லாமியர்களின் லாஜிக் எப்படி அவர்களுக்கே கேடு விளைவிக்கும் ?
  4. முடிவுரை 

1) இஸ்லாமியர் தமீம் அன்சாரி அவர்கள் அனுப்பிய பின்னூட்டம் 

from: Thamem thamem_ansarixxxxxxxxxx@yahoo.com 

to: isa.koranxxxxxxx@gmail.com

date: Thu, May 24, 2012 at 3:52 PM

subject: Feedback from Answering Islam

NAME: Thamem

MESSAGE:

அன்பு கிறுத்தவ சகோதரர்களே தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள், அந்த கணக்கெடுப்பில் நம்மை கிறுத்துவ நடைமுறைக்கு எதிராக நடக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அவர்களிடம் ஏமாந்து விடாமல் உங்களின் தந்தையின் பெயரை கேட்கும்போது எல்லா கிறுத்தவர்களும் மறக்காமல் பரலோகத்தில் உள்ள நம் பிதாவின் பெயரை மட்டும் சொல்லவும். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வேதாகமத்தை பொய்யாக்க நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும். வேத வசனம் வெல்லட்டும்! அல்லேலுயா! 

மத்தேயு 23:9பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 

2) சகோதரர் கொல்வின் அவர்கள் பதித்த பதில்

சகோதரர் கொல்வின் அவர்கள் பதித்த பதில் போதுமானதாக இருக்கிறது. ஆகையால், அதனை இங்கு அந்த இஸ்லாமியருக்கு பதிலாக பதிக்கிறேன்.

Brother Colvin: இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்'' (மத்தேயு 23:9) 

-- இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் பாராட்டிப் போற்றவேண்டும் என்றும், சிறப்புப் பெயர்கள் சூட்டி தங்களை அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். யூத சமயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அத்தலைவர்கள் ''ரபி'' (போதகர்), ''தந்தை'' போன்ற பெயர்களால் அழைக்கப்படுவதை விரும்பினார்கள். அவர்களைப் பார்த்து இயேசு கூறியது: ''இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்''. சிலர் இயேசு கூறிய இச்சொற்களுக்குத் தவறான விளக்கம் தந்து, இயேசு நாம் யாரையும் தந்தை என அழைக்கலாகாது எனக் கூறுகிறார் என்பர். இது சரியான விளக்கம் அல்ல. இங்கே குறிக்கப்படுகின்ற ''தந்தை'' என்னும் சொல் நம் சொந்தப் பெற்றோரைக் குறிக்க நாம் பயன்படுத்தும் சொல் அல்ல. மாறாக, வணக்கமும் மரியாதையும் பெறும் வண்ணம் அக்கால மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் ''தந்தை'' என அழைக்கவேண்டும் என்று கோரியது சரியல்ல என்பதே இயேசுவின் போதனை. மேலும், கிறிஸ்தவ சபைகளில் தலைமைப் பொறுப்புக் கொண்டவர்களைத் தந்தையர் என அழைக்கும் வழக்கம் உண்டு. இதை இயேசு கண்டனம் செய்தார் என்பதும் சரியாகாது. கடவுள் ஒருவரே நம் அனைவருக்கும் தந்தை. அதே நேரத்தில் கடவுளின் பெயரால் நம்மை வழிநடத்தும் பொறுப்புடையோரை நாம் தந்தையர் என அழைப்பது பொருத்தமே. 

-- போதகர் என்றும் தந்தை என்றும் திருச்சபையில் அழைக்கப்படுபவர்கள் உண்மையிலேயே இயேசுவின் போதனையைப் போதிப்பவர்களாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் தந்தையாகிற கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்பவர்களாக வாழ வேண்டும். அப்போது அவர்களுடைய சொல்லும் செயலும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். அக்காலப் பரிசேயரிடமும் மறைநூல் அறிஞரிடமும் இயேசு கண்ட குறை நம்மிடையே தோன்றாது. வெளிவேடம் இல்லாத இடத்தில் உண்மையான பண்பு துலங்கி மிளிரும். 

மூலம்: http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=4&topic=2416&Itemid=287  

3) இஸ்லாமியர்களின் லாஜிக் எப்படி அவர்களுக்கே கேடு விளைவிக்கும்?

இதர மார்க்க விஷயங்களில் அதிகமாக தங்கள் கைவரிசயை காட்ட இஸ்லாமியர்கள் அதிகமாக விரும்புவார்கள். ஆனால், அதே லாஜிக்கை தங்கள் மார்க்க விஷயங்களுக்கு என்று வரும் போது, தத்துவம் பேசுவார்கள், விஞ்ஞானம் பேசுவார்கள், அவதூறு சொல்கிறார்கள் என்று புலம்புவார்கள். 

நம்முடைய அன்பு சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள், பைபிளின் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு, அதன் பின்னனி என்ன? அந்த வார்த்தைகளை இயேசு கூறும் போது எந்த அர்த்தத்தோடு கூறினார், போன்றவற்றை புறக்கணித்துவிட்டு, கேலியாக விமர்சித்துள்ளார். 

அதாவது, இதர மார்க்க விஷயங்களில் எப்போதும் "எழுத்துவாரியாக பொருள் செய்வது" இவர்களின் வழக்கம். மத்தேயு 23:9ம் வசனத்தில் "யாரையும் உங்கள் தந்தை என்று அழைக்கவேண்டாம், தேவன் ஒருவரே உங்கள் தந்தையாக இருக்கிறார்" என்று இயேசு கூறியதை, சரீர பிரகாரமான தந்தையை இயேசு குறிப்பிடுகிறார் என்று அர்த்தம் செய்துக்கொண்டு விமர்சித்துள்ளார். இது தெரியாமல் செய்த பிழை அல்ல, தெரிந்தே பைபிளை கேலிசெய்யவேண்டும் என்று எடுத்த ஒரு இஸ்லாமிய முயற்சி. 

இஸ்லாமியர்களின் இந்த லாஜிக்படியே நாமும் ஒரு விஷயத்தை இங்கு காணப்போகிறோம், அதாவது குர்ஆனின் ஒரு வசனத்தை சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள் தங்கள் இஸ்லாமிய வழக்கப்படி பொருள் கூறினால் எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம். இந்த இடத்தில் என்னை தவறாக யாரும் நினைக்கவேண்டாம், இது என்னுடைய லாஜிக் இல்லை, இது தமீம் அன்சாரி அவர்களின் லாஜிக், அதாவது இஸ்லாமியர்களின் லாஜிக். 

இப்போது குர்ஆன் 33:6ம் வசனத்தின் முதல் பாகத்தை ஒருமுறை பார்ப்போம்:

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். …. (33:6)

இந்த குர்ஆன் வசனத்தில், முஹம்மதுவின் மனைவிமார்கள், இஸ்லாமியர்களுக்கு தாய்மார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. சகோதரர் தமீம் அன்சாரி தன்னுடைய லாஜிக்கின் படி சொல்லவேண்டுமென்றால், கீழ்கண்டவாறு கூறுவார்: 

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள், அந்த கணக்கெடுப்பில் நம்மை இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக நடக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அவர்களிடம் ஏமாந்து விடாமல் உங்களின் தாய்மார்களின் பெயரை கேட்கும்போது எல்லா முஸ்லிம்களும் மறக்காமல் உங்களைப் பெற்ற தாயின் பெயரோடு கூட, நம்முடைய இறைத்தூதர் அவர்களின் மனைவிமார்களின் பெயர்களையும் சொல்லவும். அவ்வாறு செய்வதன் மூலம் நம் இறைவேதத்தை பொய்யாக்க நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும். இறை வசனம் வெல்லட்டும்! அல்லாஹு அக்பர்! 

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். …. (33:6).

உதாரணத்திற்கு தமீம் அன்சாரி அவர்கள் ஜாதிவாரியான கணக்கெடுப்பில் பதில் தரும் போது, முஹம்மதுவின் மனைவிகள் அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு, இவர்கள் என் தாய்மார்கள் என்றுச் சொல்வார். 

குர்ஆன் வசனம் 33:6ன் படி, ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஹம்மதுவின் மனைவிகள் தாய்மார்கள் ஆவார்கள். முஸ்லிம்களின் லாஜிக்கின் படி, இப்படிப்பட்ட வசனங்களுக்கு ஒரு சரீர பிரகாரமான உறவுமுறையை பொருளாக சொல்வதினால், தமீம் அன்சாரி அவர்களுக்கும், முஹம்மதுவின் மனைவிகள் சரீர பிரகாரமான தாய்மார்கள் ஆவார்கள். ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், தமீம் அன்சாரி அவர்களின் சரீர பிரகாரமான தாய்மார்கள், அவருடைய அப்பாவிற்கு சரீர பிரகாரமான மனைவியாவார்கள். அதாவது முஹம்மதுவின் மனைவிகள், தமீம் அன்சாரி அவர்களின் அப்பாவிற்கும் மனைவிகள் என்று கருத்து கொள்ளவேண்டி வருகிறது. இது தான் சிக்கல். 

இப்படி உலக இஸ்லாமியர்கள் அனைவருக்கும் முஹம்மதுவின் மனைவிகள் சரீர பிரகார மனைவிகள் என்று சொல்லவேண்டி வரும். இப்படி தமீம் அன்சாரி அவர்களும் பொருள் கொள்ளமாட்டார்கள், நானும் இப்படி பொருள் கொள்ளமாட்டேன். ஆனால், தமீம் அன்சாரிக்கு தன்னுடைய லாஜிக் தன்னுடைய மார்க்கத்தை எந்த இடத்தில் கொண்டுச் சேர்த்துள்ளது என்று நன்றாக புரிந்து இருக்கும். இப்போது தமீம் அன்சாரி செய்த தவறு என்ன‌ என்று அவருக்கே புரிந்து இருக்கும்! 

குர்ஆன் 33:6ம் வசனம் சரீர பிரகாரமான பொருளில் சொல்லப்படவில்லை என்று எனக்கு தெரிந்திருந்தாலும், தமீம் அன்சாரி போன்றவர்களின் அறியாமையை போக்குவதற்கு அவர்களின் வழியிலேயேச் சென்று விவரிக்கவேண்டியுள்ளது, அப்போது தான் இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களின் மார்க்க விஷயங்களில் நேர்மையாக நியாயமாக நடந்துக் கொள்வார்கள். அதாவது இப்படிப்பட்ட இஸ்லாமியர் சிலருக்கு சுளுக்கு பிடித்து இருக்கும், அந்த சுளுக்குக்கு சிகிச்சை செய்து அதை போக்கவேண்டும், போக்கவில்லையானால், அவர்கள் கஷ்டப்படுவார்கள். நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களின் சுளுக்கை நீக்குவது, கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கடமையல்லவா? ஆகையால் தான் அவர்களுக்கு புரியும் வண்ணம் அவர்களின் சுளுக்கை நீக்கியுள்ளேன். முழு சுளுக்கும் உடனே நீங்காது. இதற்கு அதிக நாட்கள் ஆகும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் கிறிஸ்தவ சகோதரர்களின் அதிகமான வருகையால், எழுத்துக்களால், இஸ்லாமியர்களின் இந்த சுளுக்கு சிறிது சிறிதாக நீங்கிக்கொண்டு இருக்கிறது. 

[இந்த வரிகளை எழுதும் எனக்கு இன்று உண்மையாகவே கழுத்தில் சுளுக்கு பிடித்து இருக்கிறது, கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பமுடியவில்லை. என்ன! உமருக்கும் சுளுக்கா? என்று கேட்கவேண்டாம், எனக்கு இன்று பிடித்து இருப்பது "கழுத்து சுளுக்கு", தமீம் அன்சாரி சகோதரருக்கு பிடித்து இருப்பது, "கருத்து சுளுக்கு". கழுத்து சுளுக்கை சீக்கிரமாக சுகமாக்கிவிடலாம், ஆனால், கருத்து சுளுக்கை நீக்குவதற்கு அதிக நேரமும், பிரயாசமும் தேவைப்படும் ஏனென்றால், கருத்து சுளுக்கு அவர்களின் மூளைக்குள் சிறிது சிறிதாகச் சென்று, இன்று சிம்மாசனம் போட்டு ‌அமர்ந்துள்ளது, அந்த சுளுக்கை நீக்க இப்படிப்பட்ட அவசர மற்றும் ஆழமான சிகிச்சைகள் தேவைப்படுகிறது.]

4) முடிவுரை:

இந்த நேரத்தில் நீதிமொழிகள் 26:4, 5ம் வசனங்களை ஒரு முறை பார்ப்பது நல்லது என்று கருதுகிறேன். 

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். (நீதிமொழிகள் 26:5) 

மேற்கண்ட வசனத்தின் படி, இஸ்லாமியர்களின் அறியாமையை அவர்கள் உணரும்படி நாம் பதில் தரவேண்டும். இல்லையென்றால், அவர்கள் தங்கள் பார்வைக்கு ஞானவான்களாக கருதிக்கொண்டு, இன்னும் அதிக கேடு விளைவிப்பார்கள். தங்களுக்கு பைபிள் பற்றி எதுவும் தெரியாதபட்சத்திலும், யாரோ சொன்னதை அப்படியே எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 

இதே போல, கீழ்கண்ட வசனத்தின் படி, இஸ்லாமியர்களின் நிலைக்கு நாமும் இறங்கி பதில் தரக்கூடாது, அதாவது, உண்மை எது என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவர்கள் பைபிளின் வசனங்களுக்கு வியாக்கீனம் செய்வது போல நாம் செய்யக்கூடாது. 

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். (நீதிமொழிகள் 26:4) 

குர்‍ஆன் 33:6ம் வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் நேரடியான பொருளில் எடுக்கத் தேவையில்லை, அதாவது முஹம்மதுவின் மனைவிகள் எல்லா இஸ்லாமியர்களுக்கும் சரீர பிரகாரமான உறவு முறையை கருத்தில் கொண்டு "தாய்மார்கள்" என்று சொல்லவில்லை என்பதை நாம் அறிவோம். இதனை அறிந்து இருந்தும், இஸ்லாமியர்கள் போல கீழ்தரமாக நம்முடையை நிலையை இறக்கிவிட்டு, "இந்த வசனம் சரீர பிரகாரமான உறவுமுறையைத் தான் குறிக்கிறது" என்று நாம் சொல்வதில்லை, அதாவது அவர்களைப்போல நாமும் நம் நிலையை விட்டு இறங்கி கேள்வி கேட்பதில்லை. இப்படி செய்தால், அவர்களைப்போல நாமும் அஞ்ஞானிகளாக கருதப்படுவோம். 

கடைசியாக, எல்லா இஸ்லாமியர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அல்லது இதனை நீங்கள் எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம், அதாவது பைபிளின் வசனங்களுக்கு நேர்மையான முறையில் நீங்கள் விமர்சனம் செய்தால், அல்லது விளக்கம் கேட்டால், கிறிஸ்தவர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால், உண்மை தெரிந்து இருந்தும் வேண்டுமென்றே மாற்றி பொருள் கூறுவது, கிண்டலடிப்பது போன்றவைகள் செய்தால், உங்கள் வழியிலேயே வந்து உங்கள் அறியாமை என்ன என்பது உங்களுக்கே புரியும் வண்ணம் பதில் தர கிறிஸ்தவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த மத்தேயு 23:9ம் வசனம் பற்றி சுருக்கமாக கொடுக்கப்பட்ட பதிலே போதுமானதாக உள்ளது. இன்னும் நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது என்று இஸ்லாமியர்கள் கருதினால், அதை தெரியப்படுத்தினால் நிச்சயமாக விளக்கம் தரப்படும்.

மூலம்: http://www.isakoran.blogspot.in/2012/06/blog-post.html

உமரின் ஈமெயில் உரையாடல் கட்டுரைகள்