குமாரனை முத்தமிடு அல்லது கருப்பு கல்லை முத்தமிடு

(Kiss The Son Or Kiss The Stone)

சங்கீதம் 2:12இல், சங்கீதக்காரன் நம்மை "குமாரனை முத்தமிடுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.

யார் இந்த குமாரன்?

இந்த சங்கீதத்தின் தொடக்கத்தில் (2:2), அந்த குமாரன் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர் வேறு யாருமல்ல, அவர் அபிஷேகம் செய்யப்பட்டவர், அவர் தான் கிறிஸ்து.

"முத்தம் கொடுத்தல்" என்பது எதைக் குறிக்கிறது?

ஒருவர் இன்னொருவருக்கு மதிப்பு கொடுப்பதை, சமர்ப்பிப்பதை 'முத்தம் கொடுப்பதின்' மூலம் அடையாளப்படுத்தலாம். ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர், தாழ்ந்த ஸ்தானத்தில் இருப்பவரிடமிருந்து முத்தம் பெறுகிறார். இதே முத்தம் இறைவனிடம் வந்தால்,  அது அவ்விருவரின் இடையில் "இருக்கும் உறவு மற்றும் பாசத்தை" குறிக்கிறது. இந்த பாசத்தை இறைவன் மனிதனிடம் எதிர்ப்பார்க்கிறார். நம்முடைய நிலை என்ன? இறைவனுடைய உயர்ந்த நிலை என்ன? என்பதை நாம் உணர்ந்து, அவருக்கு முத்தம் கொடுத்து, அவருடைய உறவில் மகிழவேண்டும், இதை இறைவன் விரும்புகிறார் (David Guzik, Psalm 2 The Reign Of The Lord’s Anointed).

"குமாரனை முத்தமிடுங்கள் என்ற கட்டளையானது" உறவை குறிக்கிறது. இது அன்பு, பக்தி மற்றும் சமர்ப்பணத்தை வெளிக்காட்டும் படமாக உள்ளது. இவ்வசனத்தை நாம் அதன் மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் படித்தால், அது பூமியின் அரசர்கள் மற்றும் நீதிபதிகள் பற்றி பேசுவதை கவனிக்கமுடியும். பண்டைய காலங்களில், இன்றைய காலங்களில் கூட‌, ராஜாவின் கரங்களை பிடித்து, அவரது குடிமக்கள் மரியாதையின் அன்பின் வெளிப்பாடாக முத்தமிடுவதை கவனிக்கமுடியும்.

சங்கீதம் 2ன் படி, பூமியின் ராஜாக்களும் நீதிபதிகளும் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு (குமாரனுக்கு) முன்பாக தங்களை தாழ்த்திக் கொள்ளும்படியும், அவருடைய மேன்மையை அங்கீகரிக்கவேண்டுமென்று கட்டளையிடப்பட்டு இருக்கிறார்கள். அரசர்களே, நீதிபதிகளே குமாரனை முத்தமிடவேண்டுமென்றால், சாதாரண மனிதர்களாகிய நம்முடைய நிலை என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்? மன்னர்கள் மற்றும் நீதிபதிகளிடம் இந்த சங்கீதம் பேசுகிறது,  அப்படியானால், அந்த மன்னர்களுக்கு உட்பட்ட மக்களுக்கும், அதாவது முழு மனுகுலத்திற்கும் பொருந்துமல்லவா? நாம் அனைவரும் அக்கட்டளைக்கு கீழ்படியவேண்டுமல்லவா? (Guzik)

அனைத்து மனிதகுலமும் குமாரனான இயேசு கிறிஸ்துவுக்கு அடிபணியவேண்டும்.

சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். (தானியேல் 7:14)

குமாரனை முத்தமிடுவதற்குப் பதிலாக கல்லை முத்தமிட முஹம்மது தவறாக போதிக்கப்பட்டதேன்? முஹம்மது தம்முடைய  பக்தியையும், பாசத்தையும் அன்பையும் "மூலைக்கல் - The Cornerstone(எபேசியர் 2:20)" என்று அழைக்கப்பட்ட குமாரனுக்கு கொடுப்பதற்கு பதிலாக, ஒரு உயிரற்ற கல்லுக்கு முத்தமிட்டு கொடுத்தது ஏன்?

இயேசு மட்டுமே "நமது பாவங்களுக்கான பரிகாரம்" என்று பைபிள் கற்பிக்கிறது (1 யோவான் 2:2). ஆனால் அந்த உயிரற்ற கருப்புக்கல் முஸ்லிம்களின் பாவங்களுக்கு பரிகாரம் அளிக்கிறது என்று முஹம்மது கூறினார்!

இப்னு உமர் அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் கூறுவதை நான் கேட்டேன்: "அந்த கருப்புக் கல்லை தொடுவது, பாவங்களுக்கு பரிகாரம் ஆகும்." (நூல்: திர்மிதி, 959)

இயேசு மனிதர்களின் பாவங்களை சுமந்துக்கொண்டார் என்று பைபிள் போதிக்கிறது. (பார்க்க‌: மாற்கு 10:45, 2 கொரிந்தியர் 5:21, ஏசாயா 53:12). ஆனால் மனிதனின் பாவங்களை கல் உறிஞ்சும் என்று முஹம்மது கூறினார்!

இப்னு அப்பாஸ் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் சொன்னார்: "சொர்க்கத்திலிருந்து கருப்பு கல் இறங்கியபோது, அது பாலை விட வெண்மையாக இருந்தது, ஆனால் ஆதமின் மகன்களின் பாவங்கள் அதை கருப்பாக்கியது." (நூல்: திர்மிதி 877; அஹ்மத், 2792)

நம் பாவங்களிலிருந்து நம்மை காப்பாற்ற இயேசு வந்தார் என்று கூறும் கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் கேலி செய்கிறார்கள். ஆயினும், கருங்கல்லால் முஸ்லிம்களின் பாவங்கள் போக்கப்படும் என்ற முஹம்மதுவின் கூற்றுப் பற்றி அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. முஹம்மது ஏன் இயேசுவின் இடத்தில் ஒரு கல்லை வைத்து பார்க்கிறார்?

இயேசு "பூமியில் வந்த‌ இறைவனின் அவதாரம்" என்று பைபிள் போதிக்கின்றது. இயேசு நம்மோடு இருக்கும் இறைவன் ஆவார்(மத்தேயு 1:23).

முஸ்லீம்களின் மத‌நூல்களின் படி, "காபாவில் உள்ள‌ கருங்கல்லானது பூமியில் அல்லாஹ்வின் கையை பிரதிபலிக்கிறது".

கருப்பு கல் என்பது பூமியில் உன்னதமானவனாகிய அல்லாஹ்வின் வலது கை ஆகும். Ibn Qutayba in Ta’ wil Mukhtalif al-Hadith (1972 ed. p. 215=1995 ed. p. 198, 262)

காபாவின் கருப்பு கல் என்பது பூமியில் அல்லாஹ்வின் வலது கை ஆகும்; யார் அதைத் தொட்டாலும் அல்லது முத்தமிட்டாலும், அவர் அல்லாஹ்வுடன் கைகுலுக்கி வலது கையை முத்தமிடுவது போலாகும்.

الحجر الأسود يمين الله في الأرض، فمن صافحه وقبَّله فكأنما صافح الله وقبل يمينه

"The Black Stone is the right hand of Allah on earth; whoever touches it or kisses it, it is as if he shakes hands with Allah and kisses His right hand."

(source: tavhid.org; this site is no longer active - இந்த தளம் இப்போது செயல்படுவதில்லை)

ஸஹிஹ் முஸ்லிம் நூலிலிருந்து சான்று:

2435. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்" என்றார்கள்.

2439. சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முகம் பதித்து முத்தமிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்ததை நான் கண்டேன். (எனவே உன்னை நான் முத்தமிடுகிறேன்)" என்றார்கள்.

முஹம்மது ஏன் தன் பக்தியையும் அன்பையும் ஒரு கல்லுக்கு கொடுத்தார்? பக்தியையும் அன்பையும் இயேசுவிடம் செலுத்துங்கள் என்று பைபிள் சொல்லியிருக்கும் போது, ஏன் முஹம்மது அதனை ஒரு உயிரற்ற கல்லுக்குச் செலுத்தினார்? 

முஹம்மது சிலை வழிபாட்டாளராக இருந்த காலத்திலிருந்தே வணக்கத்திற்குரிய ஒரு பொருளாக கல்லை வைத்துள்ளார். அதன் வெளிப்பாடு தான், இந்த கல்லுக்கு முத்தமிடும் செயல்.

புகாரி நூலில் இதைப் பற்றி வரும் ஒரு செய்தியை பாருங்கள்:

புகாரி  4376. அபூரஜாஉ அல்உத்தாரிதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (அறியாமைக் காலத்தில்) கல்லை வழிபட்டுக்கொண்டிருந்தோம். (நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்த) ஒரு கல்லைவிடச் சிறந்த மற்றொரு கல்லை நாங்கள் கண்டால் அதை எடுத்துக்கொண்டு பழையதை எறிந்துவிடுவோம். கல் ஏதும் எங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் மண்கட்டியைச் சேகரி(த்துக் குவி)ப்போம். பிறகு ஆட்டைக் கொண்டுவருவோம்; அதன் பாலை (குவிந்து கிடக்கும்) அந்த மண்கட்டியின் மீது கறப்போம்; பிறகு அதைச் சுற்றிவருவோம். . . ..

இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் முஹம்மது ஒரு சிலை வழிபாட்டுக்காரராக‌ இருந்தார், காபாவில் இருந்த பல சிலைகளை தெய்வங்களாக வணங்கிவந்தார். அல்லாஹ்வின் இறைதூதராக மாறிய பிறகும் கூட தம் முந்தைய சிலைவழிப்பாட்டில் இருந்த சில பழக்கங்களை அவர் விடவில்லை. காபாவை சுற்றுவதும், காபாவில் உள்ள கல்லுக்கு முத்தமிடுவதும் அப்படிப்பட்ட ஒரு பழக்கமாகும். 

சங்கீதம் 2ம் அத்தியாயத்தில் சொன்னது போன்று, "குமாரனை முத்தஞ்செய்யுங்கள்" என்ற கட்டளையை முஹம்மது பின்பற்றியிருந்திருக்கவேண்டும், இறைவன் கொடுக்கும் இரட்சிப்பை பெற்று இருந்திருக்கவேண்டும். ஒரு கல் மக்களின் பாவங்களை போக்கும் என்று அவர் தவறாக எண்ணியுள்ளார், அதையே இஸ்லாமிலும் புகுத்திவிட்டுள்ளார்.

முஸ்லிம்களே! மக்காவிற்கு ஹஜ் பயணம் செய்யும் நீங்கள், காபாவில் உள்ள அந்த கல்லை முத்தமிட்டுள்ளீர்களா? அப்படியானால், உங்கள் பாவங்களை அந்த கல் ஏற்றுக்கொண்டதா? இந்த நிச்சயம் உங்களுக்கு உண்டா? நீங்கள் அல்லாஹ்விடம் நியாயத்தீர்ப்புக்காக நிற்கும் போது, 'நான் காபாவில் உள்ள கல்லுக்கு முத்தமிட்டுள்ளேன், அதனால் என் பாவங்கள் நீங்கியது' என்று தைரியமாகச் சொல்லமுடியுமா? சிந்தியுங்கள்.

தேதி: 10th Sept 2021

மூலம்: https://www.faithbrowser.com/kiss-the-son-or-kiss-the-stone/


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்