இஸ்லாம் உலகை ஆளுமா? (அ) உலகிலிருந்து அழிந்தே போகுமா? முஹம்மதுவின் முன்னறிவிப்பு என்ன?

இன்று பல கோடி முஸ்லிம்களை ’இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்’ என்ற நம்பிக்கை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நம்பிக்கையினால், சில முஸ்லிம்கள்  ஒரு கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டும், இன்னொரு கையில் குர்-ஆனை பிடித்துக்கொண்டும், உலகை ஒருநாள் இஸ்லாம் ஆளும் என்று கோஷமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ”அந்த நாளுக்கான ஆயத்தங்களை இன்று நாங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டோம்” என்று சொல்லிக்கொண்டு, பட்டனை சட்டென்று அழுத்தி, குண்டுகளை வெடிக்கச்செய்து தாங்களும் அழிந்து மற்றவர்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உலகை கொண்டுவரவேண்டும் என்ற தீராத ஆசையால் தான் அன்று அல்கெய்தா, இன்று ஐஎஸ்ஐஎஸ்  ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறது. தீவிரவாதி முஸ்லிம்களாகிய பக்தாதி முதற்கொண்டு, அமைதியை விரும்பும்  ரஹீம் பாய் வரை ‘இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்’ என்ற நம்பிக்கையை அடிமனதில் வைத்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள்.  ஆனால், முஹம்மதுவின் ஒரு குறிப்பிட்ட முன்னறிவிப்பு, உலகை இஸ்லாம் ஆளாது, அதற்கு பதிலாக, ஒரு பாம்பு தனக்கு ஆபத்து வரும் போது எப்படி தன் புற்றுக்குச் சென்று அபயம் பெறுமோ (தப்பித்துக்கொள்ளுமோ), அது போல இஸ்லாமும் ”தான் உருவான இடத்திற்கே சென்று அபயம் பெரும்” என்று சொல்கிறது.

இது உண்மையா?

இந்த விவரம் இஸ்லாமிய ஆதாரநூல்களான ஹதீஸ்களில் காணப்படுகின்றது.

1) குறைந்த எண்ணிக்கையில் தொடங்கி, அதே எண்ணிக்கையில் முடிவடையும் இஸ்லாம்:

இஸ்லாம் ஒரு மனிதரோடு தொடங்கியது, அந்த மனிதர் முஹம்மது ஆவார். அவருக்கு அடுத்து, அவரது மனைவி கதிஜா அவர்கள், அதன் பிறகு இதர நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் ஏற்றனர். மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரி செய்யும் போது கூட சில நூறு பேரை மட்டுமே இஸ்லாம் சம்பாதித்து இருந்தது. 

கீழ்கண்ட ஹதீஸ்களில் இஸ்லாமின் எதிர்காலம் பற்றி முஹம்மது என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்:

முஸ்லிம் ஹதீஸ் எண்: 232, 233, 234 மற்றும் புகாரி ஹதீஸ் எண்: 1876

பாடம் : 65 இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது; குறைந்த எண்ணிக்கையினரிடையே தான் அது திரும்பிச்செல்லும். அது (இறுதியில் மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ ஆகிய) இரு பள்ளிவாசல்களிடையே அபயம் பெறும். 

232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது. 

233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. 

பாடம் : 66 இறுதிக் காலத்தில் இறைநம்பிக்கை (இல்லாமற்) போய்விடுவது. 

234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

புகாரி ஹதீஸ் எண்: 1876

பாடம் : 6 இறை நம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும். 

1876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!"  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

2) முஹம்மதுவின் இந்த தீர்க்கதரிசனம் (முன்னறிவிப்பு) நிறைவேறுமா?

இஸ்லாமிய நபி முஹம்மது எதையும் சொந்தமாக சொல்லமாட்டார், முக்கியமாக இஸ்லாம்  பற்றி அவர் சொந்த சரக்கை அவிழ்த்துவிடமாட்டார், இது தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. அவர் இஸ்லாம் பற்றி சொன்னதெல்லாம், அல்லாஹ்விடமிருந்து வஹியாக (வெளிப்பாடாக) பெற்றுத்தான் சொன்னார். மேலும், ஹதீஸ் நூல்களில் புகாரியும், முஸ்லிமும் முன்னணியில் இருக்கும் நூல்கள் ஆகும். முஸ்லிம்களுக்கு குர்-ஆனுக்கு அடுத்தபடியான இறைவேதம் ஹதீஸ்களாகும். குர்-ஆனில் அல்லாஹ் மட்டும் பேசியிருக்கிறார், ஆனால், ஹதீஸ்களில் அல்லாஹ்வும் முஹம்மதுவும் பேசியுள்ளார்கள் என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. 

மேற்கண்ட ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை சுருக்கினால், கீழ்கண்ட விவரங்கள் கிடைக்கும்:

அ) இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையே தோன்றியது. 

ஆ) அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும், அதாவது கடைசியில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் வெறும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களாக இருப்பார்கள்.

இ) இதனை புரிந்துக்கொள்ள ஒரு உதாரணம்: பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும். பாம்புக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால் உடனே தப்பித்துக்கொள்ள புற்றுகளைத் தேடி அதில் அபயம் பெறும், அது போல, இஸ்லாமுக்கு ஆபத்து வரும், அப்போது மக்கா மதினாவில் அது சென்று அபயம் பெறும்.

ஈ) பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும். அப்படியானால், முஸ்லிம்கள் உலகில் அற்றுப்போகும் போது தான், மறுமை நாள் வரும். உலகில் முஸ்லிம்கள் இல்லாமல் இருந்தால், அது தான் மறுமை நாளுக்கு அடையாளம்.

உ) இதனை சரியாக புரிந்துக்கொள்வதானால், "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது. ஆக, உலகின் கடைசி முஸ்லிம் எப்போது மரிப்பானோ, அப்போது தான் மறுமை நாள் வரும்.

3) ஆய்வு:

இதுவரை முஸ்லிம்களின் நம்பிக்கையை பார்த்தோம், அதாவது ஒரு நாள் இஸ்லாம் முழு உலகையும் ஆளும். மேலும் உலகில் இருக்கும் எல்லா ஜாதிக்காரர்களையும், நாட்டுக்காரர்களையும் முஸ்லிம்களாக மாற்றிவிடுவார்கள் முஸ்லிம்கள் (மாறாதவர்கள் செத்துத்தொலைக்கவேண்டியது தான்). இது தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால், முஹம்மது அல்லாஹ்விடமிருந்து வெளிப்பாட்டைப் பெற்று அறிவித்தது என்னவென்றால், ‘உலகில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை உலக முடிவு வராது. காஃபிர்கள் இருப்பார்கள், கிறிஸ்தவர்கள் இருப்பார்கள், இந்துக்கள் இருப்பார்கள், நாத்தீகர்கள் இருப்பார்கள் ஆனால், முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுப்போவார்கள், அல்லது இல்லாமல் போவார்கள், அப்போது தான் முடிவு வரும்’. இது மட்டுமல்ல, குறைந்த எண்ணிக்கையிலான மக்களோடு இஸ்லாம் ஆரம்பித்தது, அதே போல உலகில் இஸ்லாம் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு, கடைசியாக மக்கா மதினாவில் அது செட்டிலாகிவிடும். இந்த நிலையில் சில முஸ்லிம்கள் மட்டுமே இருப்பார்கள், அவர்களும் அழிக்கப்பட்டுவிட்டால் தான் உலக முடிவு வரும்.

4) முஸ்லிம்களுக்கு கேள்விகள்

யார் சொல்வதை நாங்கள் நம்புவது? நீங்கள் சொல்வது போல இஸ்லாம் உலகை ஆளுமா? அல்லது முஹம்மது சொன்னது போல (அல்லாஹ் சொன்னது போல) இஸ்லாம் உலகில் இல்லாமல் போய்விடுமா?

  • உலகை இஸ்லாம் ஆளும் என்ற உங்களின் நம்பிக்கை சரியானதா?
  • உலக கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும் இஸ்லாமையா நீங்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்?
  • பாம்புக்கு ஆபத்து வருவது போல, இஸ்லாமுக்கும் கடைசி காலத்தில் ஆபத்து வருமா?
  • உலக கடைசியில் அல்லாஹ் இயேசுவை பூமிக்கு அனுப்புவார், அவர் வந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக சண்டைபோடுவார், பன்றிகளை கொன்றுப்போடுவார் என்று பலவாறு முஸ்லிம்கள் சொல்கிறார்களே, அவைகள் எல்லாம் பொய்யான தகவல்களா?

குர்-ஆன் 4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.

புகாரி எண் 2222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (மேலும்  பார்க்க புகாரி எண்கள் 2476 & 3448, முஸ்லிம் எண்கள்: 242 & 243)

பிஜே அவர்களின் “கியாமத் நாளின் அடையாளங்கள்” புத்தகத்தில் உலக முடிவு நாள் பற்றி  பல ஆதாரங்களை அவர் எழுதியுள்ளார். ஆனால், பாம்பு அபயம் பெறுவது போல இஸ்லாம் அபயம் பெறும் என்ற  முஸ்லிம், மற்றும் புகாரி ஹதீஸ்கள் பற்றி மூச்சு விடவில்லை, இந்த ஹதீஸ்களை அவர் குறிப்பிடவும் இல்லை.  ஒரு வேளை நான் குறிப்பிட்ட முஸ்லிம் மற்றும் புகாரி ஹதீஸ்களை அவர் மறுக்கிறாரா? அல்லது இனிமேல் மறுப்பாரா?

முடிவுரை: 

இஸ்லாமை ஆய்வு செய்யச் செய்ய ஒன்று மட்டும் தெளிவாகபுரிகிறது, அது என்னவென்றால், இஸ்லாம் அதிகமாக குழப்புகிறது. கடந்த 1400 ஆண்டுகளாக அது குழப்பிக்கொண்டே இருக்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமினால் குழப்பப்படுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை, முஸ்லிம்களையே இஸ்லாம் அதிகமாக குழப்பிக்கொண்டு இருக்கிறது. இஸ்லாமில் அனேக முரண்பாடுகள் உள்ளன.  ஒன்றுக்கொன்று முரண்படும் விவரங்கள் குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் நிரம்ப காணப்படுகிறன. முஸ்லிம் சமுதாயம் இதனை புரிந்துக்கொள்ளாமல், தங்களுக்குள் சண்டைப்போட்டுக்கொள்கிறது அல்லது மற்றவர்களோடு சண்டை போடுகிறது. 

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்ட உலகத்தின் முடிவு நாட்கள் பற்றிய ஹதீஸ்களுக்கு முஸ்லிம்கள் விளக்கமளிப்பார்களென்று நான் நம்புகிறேன். பிஜே போன்ற அறிஞர்கள் தங்களின் தள்ளுபடி ஹதீஸ் பட்டியலில் மேற்கண்ட ஹதீஸ்களையும் சேர்த்துக்கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எது எப்படியோ! முஹம்மதுவின் மேற்கண்ட ஹதீஸ்கள் நிறைவேற என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேதி: 18, டிசம்பர் 2016


உமரின் இதர தலைப்பு கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்