2017 ரமளான் (25) – நிலமெல்லாம் இரத்தம் – பாராவை புரட்டிப்போட்ட நூல்கள்

(பாரா புரட்டிய நூல்கள் - ஓர் ஆய்வு)

இக்கட்டுரைக்கு தொடர்புடைய முந்தைய கட்டுரை: 

கடந்த ஆண்டு, நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது, ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாரா அவர்களின் சில வரிகள் என்னை மேற்கொண்டு தொடரமுடியாதபடிச் செய்தது.  அவ்வரிகளுக்கு அவருக்கு பதில் எழுதவேண்டும் என்பதற்காக நான் குறிப்பு எடுத்துக் கொண்டேன். புத்தகம் முழுவதையும் படித்துவிட்டு பதில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்,  அவரது 20வது அத்தியாயத்தை படித்து முடித்த போது, குறிப்புக்கள் அதிகமாகிக்கொண்டுச் செல்வதை உணர்ந்தேன்.   அவருக்கு உடனே பதில் எழுதவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஏனென்றால், இந்த 20வது அத்தியாயத்தில் நான் ”ஒரு பாராவிலும்” பாராவை பார்க்க முடியவில்லை. முஹம்மது வாயிலிருந்து குர்-ஆன் வசனங்கள் வந்தாலும், அது முஹம்மதுவின் வார்த்தைகள் அல்ல என்று முஸ்லிம்கள் சொல்வது போல, இந்த 20வது அத்தியாயம் முழுவதிலும் பாராவையோ அவரது கருத்துக்களையோ பார்க்கமுடியவில்லை. அவரது பேனாவிலிருந்து அவ்வரிகள் எழுதப்பட்டு இருந்தாலும், அவர் அதன் கர்த்தா என்று சொல்லமுடியாத அளவிற்கு அது அமைந்துள்ளது. பேனா அவருடையது, மையும் அவருடையது, ஆனால் எழுதிய வரிகள் அவருடையது அல்ல. அதனை அவர் ஆய்வு செய்து எழுதியதாக தெரியவில்லை, யாரோ எழுதிக் கொடுத்தவைகளை அப்படியே எழுதியது போல தெரிகிறது.  

அவ்வத்தியாயத்தை படிக்க சொடுக்கவும்: 

பா.ராகவன் - நிலமெல்லாம் இரத்தம்

அத்தியாயம் 20 - இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

தொடுப்பு: nilamellam.blogspot.in/2005/01/20.html

பாரா புரட்டிய நூல்கள்

தற்கால இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையைப் பற்றி மட்டுமே அவர் எழுதியிருந்தால், பிரச்சனையில்லை, ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த இஸ்லாமிய சரித்திரத்தையும் அவர் தொட்டு எழுதியதால், அவர் படித்த சரித்திர நூல்கள் எவை என்று பார்க்கவேண்டியுள்ளது.

அவரது 20வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விவரங்கள் சரித்திரத்திலிருந்து வந்தவைகள் அல்ல. தற்கால முஸ்லிம்கள் சத்திரத்தில் உட்கார்ந்துக்கொண்டு எழுதிய நூல்களிலிருந்து வந்தவைகள் என்பது போல தெரிகிறது. 

பாரா அவர்கள் கடைசியாக தம்முடைய தொடர்களை முடித்த போது, தாம் படித்து (ஆய்வு செய்த) கற்றுக்கொண்ட புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறார். அப்புத்தக பட்டியலை ஆவலாக நான் தேடிப்பார்த்த போது, ஒரு பெருத்த ஏமாற்றம் மிஞ்சியது. கீழ்கண்ட நூல்கள் தவிர இதர செய்திகளையும், குறுஞ்செய்திகளையும், இந்த ஆய்விற்காக படித்து கற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். ஆனால், அவைகளில் இந்த பட்டியலில் உள்ள நூல்கள் முக்கியமானவைகளாகும்.

பாரா அவர்களுக்கு நிலமெல்லாம் இரத்தம் புத்தகம் எழுத உதவிய நூல்களின் பட்டியல்:

உதவிய நூல்களின் பட்டியல்:

1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)

2. The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches, IFTA, Soudi Arabia வெளியீடு.

3. 'The 5000 Year History of the Jewish People and Their Faith. (மார்ட்டின் கில்பர்ட், Phoenix வெளியீடு)

4. A Historey of the Middle East - Peter Mansfield, பெங்குயின் வெளியீடு.

5. The Politics of Dispossession - Edward Said

6. Peace and its Discontents - Edward Said

7. Muhammad: His life based on the earliest sources - Martin Lings

8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)

9. O, Jerusalem - Larry Collins, Dominique Lapierre

10. The Middle East : Yesterday and Today - Edited by David W. Miller, Clark D. Moore (Bantom Books)

11. Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)

12. மத்தியக் கிழக்கின் சிறப்பு வரலாறு - அ. உஸ்மான் ஷெரீப், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்

13. Israel and the Arabs - Israel Communications, Jerusalem

14. 90 Minutes at Entebbe, William Stevenson (Bantam Books, New York)

15. நபிகள் நாயகம், அப்துற் றஹீம் (யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை)

16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை)

17. ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு, மு. குலாம் முஹம்மது (இலக்கியச் சோலை, சென்னை 600 003)

18. பாலஸ்தீன வரலாறு (பாகம் 1), எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (புத்தொளிப்பதிப்பகம், சென்னை 600 001)

19. Cross Roads to Israel, Christopher Sykes (collins, UK)

20. State of Palestine, Esam Shashaa

21. Palestine Refugees, Esam Shashaa

22. In the arms of a Father, Haneen al - Far

23. UN Report, Intifada, United Nations Publication

24. Ancient History of Palestine, Abu Sharar

இந்த பட்டியல் தெரிவிக்கும் உண்மைகள் என்ன?

இந்த பட்டியலைக் கண்டவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இஸ்லாமிய சரித்திரத்தை எழுதியுள்ளார், ஆனால், முக்கியமான புத்தகங்களை விட்டுவிட்டாரே, அதனால் தான் அவரது நிலமெல்லாம் இரத்தம்  புத்தகத்தில் உண்மைக்கு பற்றாக்குறை வந்துவிட்டது என்பது புரிந்தது.

இந்த பட்டியலை சிறிது ஆய்வு செய்வோம்.

1) இஸ்லாம் பற்றி எழுதுயிருக்கிறீர்கள், பட்டியலில் தமிழ் குர்-ஆன் எங்கே?

பாரா அவர்களுக்கு உதவிய மேற்கண்ட நூல்களைப் பாருங்கள் ஒரு விஷயம் பளிச்சென்று தெரியும். கண்டுபிடித்தீர்களா? ஆம், தமிழ் குர்-ஆன் இல்லை.  ஆங்கில குர்-ஆன் உள்ளதல்லவா என்று வாசகர்கள் கேட்கலாம். ஆனால், தமிழில் 100 தொடர்களை எழுதியவருக்கு குறைந்தபட்சம், தமிழில் குர்-ஆனை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்காதா? இஸ்லாமிய பெயர்களை, குர்-ஆனின் அத்தியாயங்களின் பெயர்களை சரி பார்க்க அவரிடம் ஒரு தமிழ் குர்-ஆன் இருந்திருக்கவேண்டுமல்லவா?

தமிழில் குர்-ஆனை படிக்காமலா, குர்-ஆனைப் பற்றி  ஆஹா, ஓஹோ என்று எழுதினார்? சில இடங்களில் குர்-ஆன் வசனங்களையும் குறிப்பிட்டுள்ளாரே, ஆங்கில குர்-ஆனை பார்த்தா அந்த வசனங்களை எழுதினார்?

இஸ்லாம் பற்றிய ஒரு மிகப்பெரிய நல்ல விமர்சனத்தை தமிழ் மக்களுக்காக, தமிழில் முன்வைத்த இவர் தமிழில் குர்-ஆனை படிக்காதது ஆச்சரியமே! வாழ்க பாராவின் ஆய்வு.

[தமிழில் குர்-ஆனை படிக்காத இவருக்கு, பிறகு எப்படி குர்-ஆன் விவரங்கள் கிடைத்தது? என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். முஸ்லிம்கள் எழுதிய இதர புத்தகங்களை படித்தார் அல்லவா! அது போதாதா இவருக்கு இஸ்லாமின் சரித்திரம் பற்றி எழுத!]

2) புகாரி முஸ்லிம் போன்ற ஹதிஸ்களின் தொகுப்பு எங்கே? 

குர்-ஆன் இஸ்லாமுக்கு உடல் என்றால், ஹதீஸ்கள் இஸ்லாமின் உயிர் ஆகும். ஹதீஸ்கள் இல்லாமல், முஹம்மது என்பவர் யார் என்று நாலு வரிகளில் முஸ்லிம்களால்  விவரிக்க முடியாது.  பாரா அவர்கள் புரட்டிய நூல்களைப் பாருங்கள், ஹதீஸ்களின் தொகுப்புக்கள் உள்ளனவா?

இஸ்லாமின் சரித்திரத்தை தொட்டு எழுதும் போது, முஹம்மதுவைப் பற்றிய முக்கியமான விவரங்களை புத்தகமாக எழுதும் போது, ஹதீஸ்களை படிக்கவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா என்று கேட்டால்? இந்த கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டுப் பாருங்கள். ஹதீஸ்கள் இல்லாமல் இஸ்லாம் இல்லை. ஹதீஸ்களில் உள்ளவைகள் தான் உண்மையான சரித்திர விவரங்கள், மனிதன் எழுதும் புத்தகங்கள் அல்ல என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஹதீஸிகள் கூட அல்லாஹ்வின் வஹியாகும். 

பாரா அவர்களின் பட்டியலில் ஒரு ஹதீஸின் பெயரையும் நான் பார்க்காத போது, எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. குறைந்த பட்சம் தான் தொடும் தலைப்புக்கள்  பற்றி ஹதீஸ்கள் என்ன சொல்கிறன என்பதை அறியாத இவருக்கா நான் பதில்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று என் மீதே எனக்கு கோபம் வந்துவிட்டது. இதனால் தான் பாரா அவர்கள் கீழ்கண்டவாறு தம்முடைய 17வது அத்தியாயத்தில் எழுதியுள்ளார்:

17) உமரின் மனமாற்றம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 17

ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள குர்ஆன், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் ஹதீஸ்கள் (முகம்மது நபியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் அவரது போதனைகளும் அடங்கிய பிரதிகளுக்கு ஹதீஸ் என்று பெயர். சிலர் ஹதீத் என்றும் இதனை அழைப்பார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. குர் ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது. ஹதீஸ், முகம்மது நபியினுடையது.)

குர்-ஆனையும் ஹதீஸையும் சேர்த்தால் குழப்பம் வரும் என்பதால், இவரே அவைகளை படிக்கவில்லை என்று தெரிகிறது! என்னே ஆய்வு! அதனால் தான் தனக்கு உதவிய நூல்களின் பட்டியலில் “தமிழ் குர்-ஆனையும், ஹதீஸ்களையும்” ஒதுக்கிவிட்டார் என்று தெரிகிறது.  மேற்கண்ட வரிகளில் அவர் “ஹதீஸ் முகம்மது நபியினுடையது” என்று எழுதியதிலிருந்தே, பாரா இஸ்லாமில் அரைகுறை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

வாசகர்கள் கவனத்துக்கு: யாராவது இஸ்லாம் பற்றி புத்தகம் எழுதினாலோ, அல்லது உங்களிடம் பேசினாலோ, அவருக்கு ஹதீஸ்கள் பற்றி ஒன்றுமே  தெரியவில்லை என்று உங்களுக்கு புரிந்தால், அதற்கு மேல் அவரிடம் பேசுவது வீணாகும். ஒரு நயா பைசாவிற்கு பயன்படாத பேச்சாகவே அது இருக்கும். இதிலிருந்து பாரா அவர்களின் இஸ்லாமிய அறிவு மூல நூல்களிலிருந்து வந்தவைகள் அல்ல என்று தெரிகிறது.

3) ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர நூல்கள், விரிவுரைகள் எங்கே?

இஸ்லாமின் சரித்திரம் பற்றி எழுதுபவர்கள் முக்கியமாக ஆரம்ப கால முஸ்லிம்கள் எழுதிய சரித்திர நூல்களையும், விரிவுரைகளையும்  படிக்கவேண்டும். இவைகளை படிக்காதவர்கள் சொல்லும் விவரங்கள் அனைத்திலும் உண்மை சரித்திரம் இருக்காது. 

ஒரு நபர் இஸ்லாமிய ஆரம்ப கால சரித்திர நூல்களை படிக்காமல், தற்காலத்தில் முஸ்லிம்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படித்தால், அவரிடம் உண்மையான சரித்திரத்தை எதிர்ப்பார்க்கமுடியாது. பாரா அவர்களின் பட்டியலில் இஸ்லாமின் ஆரம்பகால முஸ்லிம்கள் எழுதிய சரித்திர நூல்களின் பெயர்கள் இல்லை. எனவே, அவர் சொல்வதில் எவ்வளவு கிலோ உண்மை இருக்கும்?

ஆரம்ப கால முஸ்லிம்கள் எழுதிய முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திர புத்தகங்களில் சில:

1) Ibn Ishaq, "Sirat Rasulallah" The most authentic biography of Muhammad extant today. Translated as, "The Life of Muhammad" by A. Guillaume.

2) Ibn Sa’d, "Kitab al-Tabaqat al-Kabir", "Book of the Major Classes".

3) Tabari’s History, 39 volumes.

இந்த பட்டியலிலிருந்து ஒரு புத்தகமாவது பாராவின் நூல்களின் பட்டியலில் இருந்திருக்கவேண்டும். இன்னும் குர்-ஆன் விளக்கவுரைகளில் இப்னு கதீர் போன்ற ஒரு விளக்கவுரையாவது பட்டியலில் இருந்திருக்கவேண்டும். 

பாரா இஸ்லாமிய சரித்திரத்தை எழுதவில்லை, அவர் இன்று நடந்துக்கொண்டு இருக்கின்ற இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனைப் பற்றித் தான் எழுதினார் என்று யாராவது சொல்லக்கூடும். அப்படி அவர் எழுதுவதாக இருந்திருந்தால், 1947க்கு பிறகு என்ன நடந்தது என்று எழுத ஆரம்பித்து இருந்திருக்க வேண்டும், அவர் கி.மு. 2000 காலத்துக்குச் சென்று ஆபிரகாம் முதல் கொண்டு எழுதியிருந்திருக்கக்கூடாது. கி.பி. 7ம் நூற்றாண்டிற்குச் சென்று முஹம்மது பற்றி, குர்-ஆன் பற்றி எழுதி இருந்திருக்கக்கூடாது. 

பாரா அவர்கள் குர்-ஆன், ஹதீஸ்கள், மற்றும் ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர நூல்கள் மற்றும் விளக்கவுரைகளை கரைத்துகுடித்து இருந்திருக்கவேண்டும் என்றுச் சொல்லவில்லை. இஸ்லாமிய சரித்திரத்தின் குறைந்தபட்ச உண்மையை சரி பார்க்க இப்புத்தகங்கள் தேவைப்படுகின்றன என்றுச் சொல்கிறேன்.

4) உண்மையில் பட்டியலில் இருப்பது என்ன?

மேற்கண்ட பட்டியலில் இஸ்லாமை சரியான வகையில் அறிந்துக்கொள்ள உதவும் புத்தகங்கள் இல்லை. இஸ்லாமின் ஆரம்பகால சரித்திரத்தைச் சொல்லும் புத்தகங்கள் இல்லை. 

அந்த பட்டியலில் நாம் காண்பது:

  • 50%க்கும் அதிகமான புத்தகங்கள் முஸ்லிம்கள் எழுதியவைகள்.
  • இதர புத்தகங்கள் 20-21ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆசிரியர்கள் எழுதியவைகள் ஆகும். கிட்டத்தட்ட 1947க்கு பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகும். அமேஜான், கூகுள் புக்ஸ் மற்றும் விக்கிபீடியாவில் இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

1947க்கு பிறகு முஸ்லிம்கள் ”இஸ்ரேல்-பாலஸ்தீனம்” பற்றி எழுதினால் ”என்ன எழுதுவார்கள்” என்று நமக்குத் தெரியாதா? அவைகளை படித்து, இஸ்லாம் சரித்திரத்தை தொட்டதால் தான் பாரா இப்படிப்பட்ட பல தவறுகளை தம் புத்தகத்தில்  எழுதவேண்டி இருந்திருக்கின்றது.

அடிப்படை மூல நூல்களை படிப்பதை விட்டுவிட்டு, நூற்றுக்கணக்கான இதர நூல்களை, குறுஞ்செய்திகளை நான் படித்து இதனை எழுதினேன் என்றுச் சொல்வதில் அர்த்தமில்லை.

5) நாகூர் ரூமியும் – நிலமெல்லாம் இரத்தமும்

பாரா அவர்கள் முஸ்லிமுமில்லை கிறிஸ்தவருமில்லை. அவருக்கு பாரதம் தெரியும் பாஷா பாய் படிக்கும் குர்-ஆன் தெரியுமா? அவருக்கு பகவத்கீதை தெரியும், ஆனால் பைபிளின் சங்கீதம் தெரியுமா? நிச்சயமாக இல்லை. ஆகையால் இஸ்லாம் மற்றும் யூத கிறிஸ்தவம் பற்றிய நுணுக்கமான  சரித்திரங்கள் பற்றி எழுதும் போது ஒரு இஸ்லாமிய அறிஞரின் உதவியும், ஒரு கிறிஸ்தவ அறிஞரின்  உதவியும் அவருக்கு தேவை. இப்படி அவருக்கு யாராவது உதவினார்களா? என்று தேடியபோது, அவருடைய முடிவுரைத் தொடரில், அவருக்கு உதவி செய்த ஒரு இஸ்லாமிய அறிஞர் பற்றி எழுதியிருப்பதைக் கண்டேன் (ஆனால், பாரா அவர்கள் ஒரு கிறிஸ்தவ அல்லது யூத அறிஞரின் உதவியை நாடவில்லை என்பது அந்த முடிவுரையை படிக்கும் போது தெரிகிறது, இதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஒருவருக்கு எதிராக எழுதும் போது, அதனை சரி பார்க்க அவரிடமே கொடுக்கமுடியுமா என்ன?)

பாரா அவர்கள் நாகூர் ரூமி அவர்களுக்குச் சொன்ன நன்றி:

நிலமெல்லாம் ரத்தம் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து, அத்தியாயம் தோறும் இதன் தகவல்களைச் சரிபார்த்து, உரிய திருத்தங்கள் செய்துதந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் தேவைப்பட்ட பல அபூர்வமான நூல்களையும் அளித்து உதவியவர் பேராசிரியர், எழுத்தாளர் நாகூர் ரூமி. (மஸ்ஹரூல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.) இந்தத் தொடருக்காக அவருக்குப் பல தூக்கமில்லாத இரவுகளை வழங்கியிருக்கிறேன். பொறுமையுடன் உதவிகள் புரிந்த அவருக்கு என் நன்றி.

இதனை படித்து நான் மகிழ்ந்தேன், மேலும் திரு நாகூர் ரூமி அவர்களின் புத்தகத்தையும் பாரா அவர்கள் ‘உதவிய நூல்களின் பட்டியலில்’ குறிப்பிட்டுள்ளார் [16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை]). இந்த புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் பதித்ததுள்ளது என்பது ஒரு சிறிய குறிப்பு.

ஆக, ஒரு இஸ்லாமிய அறிஞரின் உதவி பாரா அவர்களுக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி தரும் விவரம். 

திரு நாகூர் ரூமி அவர்களுக்கு கேள்விகள்:

அருமையான இஸ்லாமிய அறிஞரே, பாரா அவர்களின் 20வது அத்தியாயத்தை நீங்கள் சரி பார்த்தீர்களா?  நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சரி பார்த்ததாக அவர் மேலே கூறியுள்ளாரே! நீங்கள் உங்கள் வேலையை சரியாகச் செய்தீர்களா? இல்லையா?  

20வது அத்தியாயத்தில் குர்-ஆனும், ஹதீஸ்களும் பொய்யானவை என்று சொல்லும் விதத்தில், ”உண்மையான இஸ்லாமிய சரித்திரத்தின் படி மூன்றே போர்கள் தான் நடந்தது” என்று பாரா அவர்கள் குறிப்பிட்டுள்ளாரே! நீங்கள் இதனை சரி பார்க்கவில்லையா?  உங்களை நம்பி அவர் மாட்டிக்கொண்டாரே! இது உங்களுக்கு அடுக்குமா? நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டீரே!

இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் என்ற புத்தகத்தையும் நீங்கள் எழுதி வெளியிட்டுள்ளீர்கள், ஆனால் இஸ்லாமையும் பாராவையும் இப்படி கோர்த்துவிட்டீர்களே! உங்களுக்கு பல தூக்கமில்லா இரவுகளை பாரா அவர்கள் கொடுத்ததாகச் சொல்கிறாரே! நீங்கள் தூங்காமல் அவரது அத்தியாயங்களை வைத்துக்கொண்டு அப்படி என்னதான் செய்தீர்கள்? அவரது அத்தியாயங்களை படித்துக்கொண்டே தூங்கிவிட்டீர்களா? [பாரா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இனி யாருக்காவது அத்தியாயங்களை  சரி பார்க்க அனுப்பும் போது, பகல் நேரத்தில் சரி பாருங்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள், பிளீஸ்].

பாவம் பாரா! ”ஒன்று! ஆரம்பத்திலேயே அவர் சரியாக எழுதவேண்டும், இல்லையென்றால் சரியாக சரிபார்ப்பவரிடம் சரிபார்த்துக் கொள்ளவேண்டும்”, இரண்டும் இல்லாமல் பாரா படும் பாடு உள்ளதே! யாரிடம் சொல்ல?

முடிவுரை:

பாரா அவர்களின் அனைத்து தொடர்களையும் படித்துவிட்டு, அதன் பிறகு “உதவிய நூல்கள்” பட்டியலுக்கு வரலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், நிலமெல்லாம் இரத்தம் 20வது அத்தியாயம் அதனை இப்போதே செய்யச் செய்துவிட்டது. இதுவரை நாம் பார்த்தது தான் பாரா அவர்களின் ஆய்வின் இலட்சனம் (20 அத்தியாயங்கள் தான் இதுவரை நான் ஆய்வு செய்துள்ளேன்). இந்த இலட்சனத்தில் அவர் மேற்கத்திய ஆய்வாளர்களை விமர்சிக்கிறார் [அவர் எங்கே விமர்சித்தார்? முஸ்லிம்கள் எழுதிக் கொடுத்ததை தானே அவர் எழுதினார்! என்பது வேறு விஷயம்].

அடுத்தடுத்த கட்டுரைகளில், அவரது 20வது அத்தியாயத்தின் ஒவ்வொரு ’பாரா’வையும் நாம் ஆராயப்போகிறோம். மேலும் இந்த அத்தியாயம் எப்படி குர்-ஆனையும், ஹதீஸ்களையும் குற்றப்படுத்துகிறது என்பதையும் பார்ப்போம்.


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்